Tuesday, April 5, 2011

அடைவார்வினை அறுமே

மணியேசுடர் ஒளியேஅரு வுருவேசிவ பரமே
தணியாத உன் சினத்தால்நுதல் விழியால்மதன் எரித்தாய்
அணியார்கழல் பதம்நாடிடத் திருநீற்றினைத் துலங்க
அணிவார்வினை அறுமேஇனி இலையோர்பிறப் பவர்க்கே....6.

நறைபூமலர்ச் சரமீசனின் திருத்தோளினில் இசைய
பிறைசூடிடும் சடையோன்கழல் செயுமாடலைக் கண்டு
நிறைவாகிய மனமோடிறை அரன்பேர்புகழ் வாயால்
அறைவார்வினை அறுமேஇனி இலையோர்பிறப் பவர்க்கே....7.

இகத்தேபெறும் துயர்யாவையும் துகைத்தோட்டிடும் எம்மான்
செகத்தேஉள அடியார்மனக் குடிலேஉறை தெய்வம்
மிகத்தானெனக் கருளேசெயும் இறைவாஎன வேண்டும்
அகத்தார்வினை அறுமேஇனி இலையோர்பிறப் பவர்க்கே....8.

தமர்தானென எமர்தானென உய்ர்ந்தாரெனச் சாடும்
சமர்மேவிய புவிமீதமை உறுசாந்தியைத் தருவோன்
நமர்தான்சிவ பஞ்சாக்கரன் திருப்பாதமே நம்பி
அமர்வார்வினை அறுமேஇனி இலையோர்பிறப் பவர்க்கே....9

சுமையாகிடும் வயதாகிட வருவானரன் துணையாய்
நமையாளுமெய் இறையோனவன் திருத்தாளினை நாடி
இமையோரவர் அருளேயென நறும்பூமலர் இட்டே
அமைவோர்வினை அறுமேஇனி இலையோர்பிறப் பவர்க்கே....10.

5 comments:

sury siva said...

வணக்கம்.
ஆறாவது பாசுரம் மூன்றாவது அடியில் ' திருற்றினை" என்னும்
சொற்றொடரினைப் பிரித்துப் பொருள் கூற வேண்டுகிறேன்.

இச்சொல்லின் இடையே ஏதேனும் ஒரு எழுத்து குறைகிறதோ ?

சுப்பு ரத்தினம்.

Thangamani said...

திரு.சூரி அவர்களுக்கு,
வணக்கம்.
திருநீற்றினை என்பதில் 'நீ' விடுபட்டது.
இப்போது சரிசெய்தேன்
சுட்டியதற்கு மிக்கநன்றி!

அன்புடன்,
தங்கமணி.

Geetha Sambasivam said...

சுமையாகிடும் வயதாகிட வருவானரன் துணையாய் //

வயது ஆக ஆகச் சுமைதான் அம்மா. நல்ல கருத்து. நன்றி பாடல்கள் அனைத்துமே அருமை.

Geetha Sambasivam said...

தொடர

Thangamani said...

vaangga giithaa,
ungga varukaikku wanRi!
thiru.sivasivaa avarkaL idukaiyil,
kiizkkaaNum peyarkaL kaaNappadukinRana.
(sivaavukku wanRi!)

சீர்காழியின் 12 பெயர்கள்:
பிரமபுரம் = 1
வேணுபுரம் = 2
புகலி = 3
வெங்குரு = 4
தோணிபுரம் = 5
பூந்தராய் = 6
சிரபுரம் = 7
புறவம் = 8
சண்பை = 9
காழி = 10
கொச்சை = 11
கழுமலம் = 12