Wednesday, August 29, 2012

மாசிலாமணியைத் தொழு நெஞ்சமே (வட திருமுல்லைவாயில்) --1

மாசிலாமணியைத் தொழு நெஞ்சமே (வட திருமுல்லைவாயில்)
--------------------------------------------
(எழுசீர் விருத்தம் - 'மா விளம் மா விளம் மா விளம் விளம்' என்ற வாய்பாடு)


துன்னும் இடரிடைத் துவளும் நெஞ்சமே
....துயரை வெல்வழி  சொல்லுவேன்
முன்னைப் பழையவன் மூல மானவன்
....முக்கண் நுதலினன் முடிவிலான்
தன்னை நினைப்பவர் தமக்குத் தயையினைத்
....தந்து காத்திடும் இறையவன்
வன்னன் வடமுல்லை வாயில் மாசிலா
....மணியைத் தொழவினை  மாயுமே....1
துன்னும்= சூழ்ந்துவரும்
வன்னம்=அழகு.

நொந்தி டரதனில் நோகும் நெஞ்சமே
...நொடியா வழியினை நுவலுவேன்
சுந்த ரன்கறை சூழ்ந்த கந்தரன்
...துங்க நதியுடை சடையினன்
வெந்த நீறணி மெய்யன் முப்புரம்
...வேவ சினமுற விழித்தவன்
மைந்தன் வடமுல்லை வாயில் மாசிலா
...மணியைத் தொழவினை மாயுமே....2


விஞ்சும் இடரினில் வீழும் நெஞ்சமே
...விலகும் வழியினைக் கூறுவேன்
கஞ்ச மலர்ப்பதம் கருதும் அன்பரைக்
...கனிவோ டருளிக் காப்பவன்
நஞ்ச மமுதென நாடி விண்ணவர்
...நலத்தை எண்ணியே உண்டவன்
மஞ்சன் வடமுல்லை வாயில் மாசிலா
...மணியைத் தொழவினை மாயுமே....3


சிரமம் தொடர்ந்திடச் செய்யும் துன்பதும்
...தீரும் வழியிது நெஞ்சமே
மரக தாம்பிகை வாமம் கொண்டவன்
...மன்றில் ஆடிடும்  வல்லவன்
மரம தடியமர் மாத வத்தினன்
...மவுன மாயருள் செய்பவன்
வரதன் வடமுல்லை வாயில் மாசிலா
...மணியைத் தொழவினை மாயுமே....4


பள்ள மேடுகள் பற்றும் வாழ்விதில்
...படிந்து இடருறும் நெஞ்சமே
விள்ள லாகவொர் வெண்ணி லாவுடன்
...வேக மிகுநதி அணிபவன்
அள்ளி வழங்கிடும் அன்பில் கனிபவன்
...ஆடல் மன்றினில் புரிகிற
வள்ளல் வட
முல்லை வாயில் மாசிலா
...மணியைத் தொழவினை மாயுமே....5
 

 

1 comment:

Geetha Sambasivam said...

மிகப் பழமையான கோயில்.பலமுறை போயிருக்கேன். அருமையான பாடல்கள். நன்றி அம்மா.