Friday, August 31, 2012

மாசிலாமணியைத் தொழு நெஞ்சமே--2

அல்லல் தன்னிலே ஆழும்  நெஞ்சமே
...அகலும் வழியிது கூறுவேன்
முல்லை நறுங்கொடி மூலம் தன்னையே
...முந்தி காட்டிய மூலவன்
'எல்லை யொன்றிலா ஏற்றம்  கொண்டவ
...எளியை நீயென இரங்குவன்
வல்லன் வடமுல்லை வாயில் மாசிலா
...மணியைத் தொழவினை மாயுமே....6 


குளமார் கண்ணொடு குமுறும் நெஞ்சமே
...குறைகள் தீர்வழி சொல்லுவேன்
உளமார் உணர்வினில் உற்ற அன்பொடு
...உமையொர் பங்கனின் நினைவொடு
தளமார் வண்ணமாய் சாற்றும் பாமலர்
...தன்னில் தங்கிடும் இறையவன்
வளமார் வடமுல்லை வாயில் மாசிலா
...மணியைத் தொழவினை மாயுமே....7


விதியி தோவென வெம்பும் நெஞ்சமே
...வெல்லும் வழியிது சொல்லுவேன்
'கதியுன் தாள்'எனக் கத்தும் சிறுவனைக்
...காக்க மறலியை உதைத்தவன்
நதியும் மதியுடன் நஞ்சார் நாகமும்
...நயமாய் சடையில் அணிமுக
மதியன் வடமுல்லை வாயில் மாசிலா
...மணியைத் தொழவினை மாயுமே....8


வீண்பி றவிச்சுழல் விட்டு வெளிவரும்
...விதத்தைச் சொல்லுவேன் நெஞ்சமே
பூண்ப .னணியெனப் பொன்னார் கொன்றையைப்
...பொங்கும் அலைநதி சடையினன்
காண்ப .னன்புறு கண்ணால் எளியரைக்
...காக்கும் வல்லவன் மறைதொழும்
மாண்பன் வடமுல்லை வாயில் மாசிலா
...மணியைத் தொழவினை மாயுமே....9


சித்த மலமதில் திகைக்கும் நெஞ்சமே
...தெளியும் வழியினைச் சொல்லுவேன்
வித்தில் மரமென விறகில் தீயென
...வெளியில் தெரிந்திடா திருப்பவன்
பித்த .னவன் திருப் பேரை உரைத்திடில்
...பீழையைத் தொலைத்திடும் இறையவன்
மத்தன் வடமுல்லை வாயில் மாசிலா
...மணியைத் தொழவினை மாயுமே....10 


 

  

No comments: