Saturday, August 18, 2012

திரு நின்ற வூர்-- 2

ஆடினான் எரிகான் மன்றில் அழலிடை ஒருவன் என்றே 
தேடினார் முடிதாள் அன்று திகைத்திட உயர்ந்தான் தீயாய் 
வாடினார் இசையில் வெல்ல வந்தவொர் விறகா ளாகிப் 
பாடினான் மேவு கின்ற பதிதிரு நின்ற வூரே....6

சேவையன் பொடுசெய் வாரின் தீந்தமிழ்ப் பாவில் தங்கும் 
கோவையன் றொருவன் சீறிக் கோலினால் வீச ஏற்கும் 
தேவையென் றுமுன்னக் காப்பான் திகழுறு வாம பாகப் 
பாவையன் மேவு கின்ற பதிதிரு நின்ற வூரே....7

ஊர்த்தவ தாண்ட வம்செய் உத்தமன் அடியார் தம்மின் 
சீர்த்தநற் றுணையாய் நின்று தீவினை விளைக்கும் துன்பைத் 
தீர்த்தவன் உமைதன் ஆகம் சேர்த்தவன் மதன்நீ றாகப் 
பார்த்தவன் மேவு கின்ற பதிதிரு நின்ற வூரே....8

பொங்குமன் பாலுள் ளத்தில் பூசலார் எடுத்த கோவில் 
தங்குவன் எளியர்க் கென்றும் தயையினை வழங்கும் வள்ளல் 
எங்கணும் நிறைந்தி ருப்பான் இடமாய் உமையைக் கொண்ட 
பங்கினன் மேவு கின்ற பதிதிரு நின்ற வூரே....9
 
 எங்கணும்=எங்கும்.

சுற்றமும் சொந்த பந்தத் தொடரெனும் தளைகள் மீட்கும் 
உற்றவன் உயிரை அன்பில் உய்ப்பவன் அடியார் நண்ணும் 
நற்றவன் குருவாய்ப் பாரில் நலம்பல மாந்தர் கொள்ளப் 
பற்றுவன் மேவு கின்ற பதிதிரு நின்ற வூரே....10 


1 comment:

Geetha Sambasivam said...

உயிரை அன்பில் உய்ப்பவன் அடியார் நண்ணும்
நற்றவன்//

ரசித்தேன்.