Monday, August 13, 2012

திருநின்றவூர்-- 1
-----------------
(அறுசீர் விருத்தம் - 'விளம் மா தேமா' - அரையடி வாய்பாடு)
(திருநின்றவூர் - பூசலார் நாயனார் வாழ்ந்த தலம்) 

துடைப்பவன் வினைசெய் துன்பை; துய்யமெய் அன்பில் வேண்டக்
கிடைப்பவன்; குருவாய்க் கல்லால் கீழமர்ந் தருளும் தேசாய்க்
கடப்பவன் யுகத்தைக் காலமாய்ச்  சுழன்றிட ஓட்டிப் பாரைப்
படைப்பவன் மேவு கின்ற பதிதிரு நின்ற வூரே. ...1

சேந்தவன் நீல கண்டம் திகழொளி நீற்ற னாக
ஆய்ந்தவன் மறைகள் நான்கும் அடியவர் உள்ளக் கோவில்
ஏய்ந்தவன்; மாணிக் காக இயமனை சினத்தால் எற்றிப்
பாய்ந்தவன் மேவு கின்ற பதிதிரு நின்ற வூரே....2
சேந்த=சிவந்த


மறைந்தவன் அருள்செய் கின்ற வகையினில் அடியார் நெஞ்சம்
நிறைந்தவன் பூச லாரின் நினைவினில் எழுந்த  கோவில்
உறைந்தவன் ஆதி அந்தம் ஒன்றுமில் லாத ஐயன்
பறந்தலை ஆடு வான்தம் பதிதிரு நின்ற வூரே....3


எண்பொலி எழுத்தைந் தென்றும் எண்ணிடும்  அடியர்க் கன்பன்
ஒண்பொலி முக்கண் நெற்றி  உடையவன்  மறைகள் தன்னைப்
பண்பொலி இசையாய் ஓதிப் பரவுவார் துன்பைத் தீர்க்கும்
பண்புடை ஐயன் மேவும் பதிதிரு நின்ற வூரே....4


குவித்திடு கரங்கள் கொண்டு குவிந்திடும் மலர்கள் தூவத்
தவித்திடத் துயர்செய்  ஊழைச் சாடியேத் தீர்க்கும் ஐயன்
கவித்திடு முடியாய்க் கொன்றைக் கவினுறச் சடைமேல் சூடும்
பவித்திரன் மேவு கின்ற பதிதிரு நின்ற வூரே...5.


 


1 comment:

Geetha Sambasivam said...

பக்கத்திலேயே இருந்தும் இந்தக் கோயிலுக்கு என்னமோ போக முடியலை. :( எப்போவானும் கிடைக்குமானு பார்க்கணும். :)