Monday, June 18, 2012

திருப்பரங் குன்றம்--2

மரகத நிற உமை கேள்வன் 
...மறைபுகழ் செய்யவன் தானும் 
அரவுடன் கரிஉரி மேவும் 
...அழலுடை அங்கையி .னானும் 
சிரமதில் மிளிர்ந்திடு திங்கள் 
...செழுமலர்க் கொன்றையி னானும் 
திரையினில் மீன்பிடிப் பானும் 
...திருப்பரங் குன்றமர்ந் தானே....6


சிரமொரு பத்துடை யானின் 
...திறல்தனை அடர்த்திடு வானும் 
மரநிழல் கீழமர் மோன 
...வடிவினில் திகழ்குரு வாகி 
வரமளித் துயர்நிலை கூட்டும் 
...மலைமகள் பங்குடையானும் 
சிரமலி மாலையி னானும் 
... திருப்பரங் குன்றமர்ந் தானே....7

விரவிடு மணப்புகை யோடு 
...விதவித நறுமலர் சூட்டிப் 
பரவிடு பத்தரைக் காக்கும் 
...பதமலர் தனையுடை யானும் 
இரவினில் எரியிடு கானில் 
...எழில்நடம் செயும்தனி யானும் 
திரைவிடம் சேர்மிடற் றானும் 
...திருப்பரங் குன்றமர்ந் தானே....8

உரியதொர் சிவனடி யாரென்(று) 
...ஒப்பிட வஞ்சக மாகச் 
சுரிதனை வீசிடும் போதும் 
...தொழும்சிவ பத்தருக் கன்பன் 
விரிசடை நுதல்விழி யானும் 
...விடைதனில் அமர்ந்தருள் வானும் 
திரியரண் மூன்றெரித் தானும் 
...திருப்பரங் குன்றமர்ந் தானே....9 

முந்தையன் பின்னவன் என்றும் 
...மூலவன் முதலவன் றானும் 
சந்திரன் வானதி பாம்பைத் 
...தலையினில் சூடிடு வானும் 
சந்ததம் பத்தியொ டெண்ணும் 
...தகவுடை யருக்கருள் வானும் 
செந்தழல் மேனியி னானும் 
...  திருப்பரங் குன்றமர்ந் தானே....10 
 
 

2 comments:

Geetha Sambasivam said...

சிரமொரு பத்துடை யானின்
...திறல்தனை அடர்த்திடு வானும் //

இந்த ஒரு நிகழ்வு ஒவ்வொரு பாடலிலும் வெவ்வேறு வடிவில் இடம்பெறுவதைக் காண்கையில் வியப்பாக இருக்கிறது. எப்படி எல்லாம் சிந்தித்து வார்த்தைகளைப் பொறுக்கி எழுதுகிறீர்கள்!

Thangamani said...

நம் தமிழ்மொழி எல்லா இலக்கணத்துக்கும்
ஏற்றபடி இசைந்து கொடுக்கும்.
மகிழ்ச்சி கீதா