Wednesday, June 22, 2011

ஒற்றியுறை கோன் (திருவொற்றியூர்)

கற்றைசடை நெற்றிவிழி பெற்றதொரு தேவை
பற்றிவிடும் பத்தியினில் இற்றுவிழும் தீமை
குற்றமலி வெற்றுரையைத் துச்சமெனத் தள்ளு
உற்றதுணை யாவர்திரு ஒற்றியுறை கோனே....6

பொத்தியபைங் கூம்பவிழும் பூமலர்கள் தூவி
நித்தியம்செய் பூசனையில் நிர்மலனாய் நிற்பான்
சத்தமிடு செஞ்சதங்கை தந்த இசைக்(கு) ஆடும்
உத்தமநி ருத்தனவன் ஒற்றியுறை கோனே....7

துப்புமவன் உய்ப்பதற்கு வைப்புமவன் என்றே
செப்பரிய முக்கணனை சொற்பதிக மேத்தும்
முப்புரமும் வெப்பெரிசெய் அப்பனவன் ஏதும்
ஒப்புமிலன் நற்புனலன் ஒற்றியுறை கோனே....8

வெப்பு=வெப்பம்.

கண்ணுதிரம் பொங்கவவன் கண்ணினையே அப்பி
எண்ணரிய மேன்மைகொளும் திண்ணனவன் தெய்வம்
விண்ணவரின் நற்றுணைவன் வேதனவன் நஞ்சை
உண்டருளும் அண்டனவன் ஒற்றியுறை கோனே....9

கல்லைமலர் ஆகவணி கண்ணுதலை வேண்டி
'எல்லையென ஏதுமிலா இன்னருளே!காவாய்!
தொல்லைவினை தீர்த்திடுக!'என்றவனைக் கெஞ்ச
ஒல்லைவினை தீர்த்தருளும் ஒற்றியுறை கோனே....10.

6 comments:

குறையொன்றுமில்லை. said...

அருமையான கவிதை இரண்டு மூன்று
முறை படித்துப் புரிந்து கொள்ள வேண்டி இருந்தது. இன்னிக்குத்தான் முதல்
தடவையா இங்க வந்தேன்.

Thangamani said...

அன்பு லக்ஷ்மி,
நீங்கள் வந்ததற்கும்,கவிதையைப்படித்துப்
பாராட்டியதற்கும் மகிழ்ச்சியுடன்,நன்றியைச்
சொல்லுகிறேன்.

அன்புடன்,
தங்கமணி.

Geetha Sambasivam said...

துப்புமவன் உய்ப்பதற்கு வைப்புமவன் என்றே
செப்பரிய முக்கணனை சொற்பதிக மேத்தும்
முப்புரமும் வெப்பெரிசெய் அப்பனவன் ஏதும்
ஒப்புமிலன் நற்புனலன் ஒற்றியுறை கோனே....8 //

இந்தப் பாடல் கொஞ்சம் பொருள் புரியவில்லையே??

துப்பும் அவன் உய்ப்பதற்கு வைப்பும் அவன் எனப் பிரிக்க வேண்டுமா?? இதன் பொருள்??

Thangamani said...

//துப்பும் அவன் உய்ப்பதற்கு வைப்பும் அவன்
எனப் பிரிக்க வேண்டுமா?? இதன் பொருள்??//

கதியும் அவன்,சேமநிதியும் அவன்
என்பது பொருள்.
//செப்பரிய முக்கணனை சொற்பதிக மேத்தும்
முப்புரமும் வெப்பெரிசெய் அப்பனவன் ஏதும்
ஒப்புமிலன் நற்புனலன் ஒற்றியுறை கோனே....8 //

கதியாக,நிதியாக
சொல்லற்கரிய முக்கண்சிவனைப்
பாடுகின்றபதிகங்கள் போற்றுகின்றன.
திரிபுரத்தை தீப்பட அழித்து,
தந்தையாய்க் காத்து,கங்கைசூடியாய்
இணையேஇல்லாதவனான
திருஒற்றியூரில்வாழும் மன்னன் அவனே.

Geetha Sambasivam said...

கற்றைசடை நெற்றிவிழி பெற்றதொரு தேவை
பற்றிவிடும் பத்தியினில் இற்றுவிழும் தீமை
குற்றமலி வெற்றுரையைத் துச்சமெனத் தள்ளு
உற்றதுணை யாவர்திரு ஒற்றியுறை கோனே....6 //

ஏற்கெனவே படிச்சாலும் குறிப்பிட்ட வரிகளை மீண்டும் படிக்க வேண்டி வந்தேன் அம்மா.


பற்றிவிடும் பத்தியினில் இற்றுவிழும் தீமை
குற்றமலி வெற்றுரையைத் துச்சமெனத் தள்ளு
உற்றதுணை யாவர்திரு ஒற்றியுறை கோனே....//
வெற்றுரையைத் துச்சமெனத் தள்ள வேண்டும். சஞ்சலமான மனம் அமைதி அடைந்தது. நன்றி அம்மா. :D

Thangamani said...

அன்பு கீதா,
வாங்க!சஞ்சல மனம் அமைதியடைந்ததற்கு
இறைவனுக்கு நன்றி சொல்வோம்!கீதா!