Sunday, February 13, 2011

பெற்ற பயன்!

செவியில் மணியொலிக்கத் தேவன் அருள்வேண்டிக்
குவியும் அடியவர்க் கூட்டம்-- கவியுமெய்
அன்பில் அகப்படும் ஆண்டவன் நாமத்தை
நம்பி செபிக்குமென் நா.

நானா விதப்பூவில் நற்றூபப் பூசனையில்
ஆனாத அன்பருளும் ஆண்டவன் -- வானார்ந்தத்
தீச்சுடர்க் கற்பூரச் செம்மணக் காற்றையே
மூச்செனக் கொள்ளுமென் மூக்கு

மூக்கின் உயிர்ப்பினில் மூங்கில் துளைப்பண்ணில்
நாக்கின் மொழியினில் நம்பனுளான் -- பாக்களில்
ஆழ்ந்த பொருளாய் அருள்பவன் தாளிடை
வீழ்ந்து பணியுமென் மெய்.

மெய்யினில் வெண்ணீறு மேவிட அஞ்சலருள்
கையில் கனலேந்தும் கைலாயன் -நைய
அலைந்திடும் ஓடுடை அரனின் தயையே
நிலையாய் நினையுமென் நெஞ்சு.

நெஞ்சில் நினைந்து நெடுஞ்சாண் கிடையாகத்
தஞ்சமவன் என்றே சரணடைவம்--விஞ்சையருள்
புனிதன் தாளினைப் போற்றிப் பணியும்
மனிதப் பிறவி சிறப்பு.

3 comments:

தமிழ் said...

வாசிக்க வாசிக்க வாசகனாய் நானும் பெற்றேன் பலன்.

நன்றிங்க‌

Thangamani said...

வாசித்ததற்கும்,தங்கள் வரவிற்கும் நன்றி!திகழ்!
மிகவும் நன்றி!திகழ்!

Geetha Sambasivam said...

பஞ்ச இந்திரியங்களும் இறைவன் புகழ் பாடுகின்றன. அருமை!