Wednesday, February 9, 2011

பெற்ற பயன்!

பெற்ற பயன் - (ஒருபா ஒருபஃது)
------------------------------------
(அந்தாதியாக மண்டலித்து வரும் 10 நேரிசை வெண்பாக்கள்)

சிறப்புறத் தில்லையில் செய்நடம் பேறாம்
பிறப்பிறப் பொன்றிலாப் பெம்மான்!-- மறைப்பாத்
திறக்கும் திருக்கதவம் தெய்வசம் பந்தன்
கறைக்கண்டன் தாள்தொழுமென் கை.

கைலைப் பதியவன் காலனைச் செற்றவன்
மெய்யருள் செய்யும் விமலனாம்!-- தையலாள்
மைவிழி தேவி மகிழ்நன் தலந்தொறும்
கைதொழச் செல்லுமென் கால்.

காலெடுத் தாடிடும் கம்பீரன் நீலனாம்
மாலயன் காணா மலையொளியாம்!-- பாலனாம்
வேலவன் தாதைக்கு விண்ணோர் இறைவனுக்குச்
சாலவும் தாழும் தலை.

தலையில் அலைநதி தாங்கிடும் அண்ணல்
கலைமதி ஆர்பரன் காப்பான்! -- குலைவில்
நிலையுறு பக்தியில் நிற்கும் சிவனைக்
கலிதீரக் காணுமென் கண்.

கண்ணுதல் தெய்வக் கருணை நெகிழ்வுற
எண்ணிட ஓடிடும் இன்னலாம்-- பண்ணொடு
சேர்கிற இன்னிசையில் செஞ்சடையன் வான்புகழ்
சீர்தனைக் கேட்கும் செவி.

1 comment:

Geetha Sambasivam said...

எண்ணிட ஓடிடும் இன்னலாம்-//

ஆமாம் அம்மா, உண்மை, இறைவனை நினைக்கையிலேயே மனம் லேசாகிறது. சந்தவசந்தத்திலே பார்த்தாலும் இங்கே கருத்துச் சொல்லலாம்னு ஒரு எண்ணம். :)