Thursday, April 25, 2013

ஆத்தூர்-- 2

பெயலாய் அருளைப் பொழியும் பெம்மான் பெண்ணோர் இடங்கொண்டான்
மயலார் வாழ்வில் தெளிவைத் தருவான் மறைகள் தொழுமீசன்
வெயிலாய் வெம்பக் காற்றாய் வீசும் அன்பன்  பதியென்பர்
கயலார் புனல்பாய் பொருநைத் தென்பால் வயலார் ஆத்தூரே....6

தகழி ஒளிரத் தூபம் கமழத் தண்பூ மலர்சூடி
முகிழும் அருளில் இடர்கள் செய்யும் முந்தை வினைதீர்ப்பான்
நிகழும் தீம்பும் நீங்க  முறைசெய் நிமலன் பதியென்பர்
புகழும் தமிழின் ஓசை என்றும் திகழும் ஆத்தூரே....7

வில்லாம் மலையில் கணையைக் கோத்து விடுத்தான் புரம்வேவ
பொல்லா வினைசெய் இடரை தீர்த்துப் புகலைத் தந்தாள்வான்
எல்லா நலமும் அளிக்கும் வள்ளல் எம்மான் பதியென்பர்
சொல்லூர் தமிழால் துதிப்போர் திரளும் நல்லூர் ஆத்தூரே....8

கண்டம் கறையன் நுதல்சேர் விழியன் கங்கை மதிசூடி
அண்டம் யாவும் இயக்கி ஆளும் அண்ணல் அடிபோற்றும்
தொண்டர் தம்மின் அன்புதெய்வம் துய்யன் பதியென்பார்
 விண்ட மலரை வண்டு நாடி மண்டும் ஆத்தூரே.

காவா யென்றே கூவு வோனைக் காக்க அருள்செய்தான்
நாவா யாகப் பவத்தைக் கடக்க நம்பன் கழல்நாடிப்
பூவாய்த் தூவிப் பணிவோர்த் தெய்வம் புனிதன் பதியென்பார்
நாவார் தமிழால் போற்றும் ஓசை ஓவா ஆத்தூரே....10


2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்த்துக்கள் அம்மா...

Thangamani said...

மிக்கநன்றி தனபாலன்.