Thursday, August 29, 2013

திருக்கருகாவூர் - 1

(கலிவிருத்தம் - 'தேமா தேமா புளிமா புளிமாங்காய்' - வாய்பாடு)(சம்பந்தர் தேவாரம் - 1.27.1 - "முந்தி நின்ற வினைக ளவைபோகச்")

மண்ணாய் விண்ணீர் வளிதீ எனவானான்
கண்ணால் அன்பைக் கனிவாய் அருளீசன்
தண்ணார் கங்கை சடையன் கருகாவூர்
எண்ணாய் நெஞ்சே இலையோர் இடர்தானே....1

தார்கொள் தோளில் தவழும் அரவேற்பான்
பேர்சொல் பத்தர் பிணிசெய் துயரோட்டும்
சீர்கொள் தாளன் திகழும் கருகாவூர்
சேர்க நெஞ்சமே சிதையும் வினைதானே....2

கோதே விஞ்சும் குணங்கொள் அடியேனுக்(கு)
ஆதா ரம்பூங் கழலே எனவேண்டி
மாதோர் பங்கன் வதியும் கருகாவூர்
நீ தீ தோட நினையாய் மடநெஞ்சே....3
கோது=குற்றம்.

நித்தன் ஆலின் நிழலில் அமர்போதன்
பத்தர் தம்மின் பரமன் கருகாவூர்
முத்தன் பூந்தாள் முடியில் தரிப்பார்க்கே
எய்த்தல் இல்லா இனிய நிலைதானே....4

அங்கம் நீற்றில் அழகாய்த் துதைந்தானின்
துங்க செந்தாள் தொழுவார்க் கருளீசன்
திங்கள்  சூடித் திகழும் கருகாவூர்
அங்கை கூப்பிப் பணிவார் அடியாரே....5


Sunday, August 18, 2013

திரு ஆவூர்ப் பசுபதீச்சரம்--5

துடியோ டொலிக்கும் பம்பையுடன்
...சுழன்றே ஆடும் நடம்கண்டு
பொடியார் மேனி புளகிக்க
...புடைசூழ் அடியார்க் கருளீசன்
கடிமா மதில்மூன் றெரிசெய்த
...கழலன் மேவி உறைகோவில்
அடியார் பலரும் வந்தேத்தும்
...ஆவூர்ப் பசுப தீச்சரமே....9

பிணியாய் வினைசெய் இடர்தீர்க்கும்
...பெம்மான் நின்ற ஊரர்தான்
பணிவாய் மனத்துள் அமைத்ததளி
...பரிவாய் அமர்ந்தே அருளியவன்
துணியாய்ப் பிறையை முடிகொண்டான்
...தொண்டர் துணைவன் உறைகோவில்
அணியார் சோலை புடைசூழும்
...ஆவூர்ப் பசுப தீச்சரமே....10

Thursday, August 15, 2013

திரு ஆவூர்ப் பசுபதீச்சரம்--4

எந்த துன்பம் வந்திடினும்
...எந்தை நாமம் சிந்திப்பார்
முந்து வினையும் நீங்கிடவே
...மூழ்கு சுழலாம் பவம்விடுப்பான்
சந்த இசைப்பாத் தமிழ்மாந்தும்
...தழலன் மேவி உறைகோவில்
அந்தண் சோலை புடைசூழும்
...ஆவூர்ப் பசுப தீச்சரமே....7

படையும்  அழலும் கரம்கொண்டான்
...பதமாய் ஆடல் புரிந்திடுவான்
விடையில் ஊர்ந்தே வந்திடுவான்
...விரும்பும் அடியார் துயர்தீர்ப்பான்
சடையன் மேவி அமர்கோவில்
...தவழும் காரார் மேகமெலாம்
அடையும் சோலை நிறைந்திருக்கும்
...ஆவூர்ப் பசுப தீச்சரமே....8

Monday, August 12, 2013

திரு ஆவூர்ப் பசுபதீச்சரம்--3

காடும் மலையும் வான்வெளியும்
...கழலன் ஆடும் களமாகும்
ஈடு வேறொன் றில்லாத
...இறைவன் அடியார் நீரிலிட்ட
ஏடும் எதிர்க்க அருள்வான்வீற்
...றிருக்கும் கோவில் தென்காற்றில்
ஆடும் பயிரார் வயல்சூழும்
...ஆவூர்ப் பசுப தீச்சரமே....5

 தசையைச் சுடுகான் தழலாடும்
...தனியன் மங்கை பங்குடையான்
விசமும் அமுதாய் விண்ணவர்க்காய்
...விரும்பி உண்ட ஈசனவன்
வசமும் ஆவான் அன்பினுக்கே
...மேவும் கோவில் வளிதவழ
அசையும் பயிரார் வயல்சூழும்
...ஆவூர்ப் பசுப தீச்சரமே....6

Saturday, August 10, 2013

திரு ஆவூர்ப் பசுபதீச்சரம்--2

ஈர்க்கும் தேசாய் ஒளிர்கின்ற
...எம்மான் மங்கை உமைபங்கன்
யார்க்கும் பரிவில் அருள்செய்வான்
...ஐயன் கழல்கள் பணிவாரின்
சீர்க்கும் பாடல் செவிமாந்தும்
...செய்யன் விழைவாய் அமர்கோவில்
ஆர்க்கும் பொன்னி அலைமோதும்
...ஆவூர்ப் பசுப தீச்சரமே....3

வெளியில் ஆடல் புரிகின்றான்
....விரிஞ்சன் மால்முன் அழலாகி
ஒளியில் சுடராய்த் திகழ்கின்ற
...உமையோர் பங்கன் புகழ்பாடத்
தெளியும் ஞானம் பெறவைக்கும்
 ...திங்கள் சூடி அமர்கோவில்   
 அளிகள் முரலும் பொழில்சூழும்
 ...ஆவூர்ப் பசுப தீச்சரமே....4

Wednesday, August 7, 2013

திரு ஆவூர்ப் பசுபதீச்சரம்--1

(அறுசீர் விருத்தம் - 'மா மா காய்' - அரையடி வாய்பாடு

பிஞ்சு மதியை அணிகின்ற
    ....பெண்ணோர் பங்கன் அடியார்கள்
தஞ்சம் என்றே கழல்பற்றின்
  ....தாங்கி அருளும் ஈசனவன்
நஞ்சை உண்ட கறைக்கண்டன்
  ....நாடி உறையும் திருக்கோவில்
அஞ்சொற் கிளிகள் நிறைசோலை
    ....ஆவூர்ப் பசுப தீச்சரமே....1

ஒளியில் சுடராய்த் திகழ்கின்ற
...உமையோர் பங்கன் புகழ்பாடித்
தெளியும் ஞானம் பெறவேண்டித்
...தேடும் அன்பர்க் கருள்செய்வான்
துளிவெண் பிறையை அணிகின்றத்
...துணைவன் மகிழ்ந்தே அமர்கோவில்
அளிகள் முரலும் பொழில்சூழும்
...ஆவூர்ப் பசுப தீச்சரமே. ..2

Saturday, August 3, 2013

தென்குடித்திட்டை ('திட்டை')---3

ஒருபது சிரம்தனை உடையவன் செருக்கழித்(து)
அருளினை அளித்தவன் அடியிணைப் போற்றியும்
திருமறை விழைபவன் தென்குடித் திட்டையை
மருவிடும் அடியவர் வல்வினை மாயுமே....8

 சூடிய மதிநதி துலங்கிடும் முடியுடன்
ஆடிய அடியையும் அயனரி காணவே
தேடிய சோதியன் தென்குடித் திட்டையை
நாடிய பத்தரை நல்லன நாடுமே....9

கரத்திலோர் மான்மறி கனல்மழு ஏந்திமுப்
புரத்தையே தீயெழப் பொடிசெயும் மன்னவன்
திரைத்தலை அரனுறை தென்குடித் திட்டையை
சிரத்தையாய்த் தொழுபவர் தீவினை சிதறுமே....10

அழுதவன் தாள்பணி அன்பரின் துணையவன்
எழுகதிர் ஒளியவன் இளமதி சடையனின்
செழுவயல் சூழ்தரு தென்குடித் திட்டையை
தொழுபவர் தொல்வினை தூசென விலகுமே....11

ஊர்விடை அமர்பவன்  வார்சடை மதியினன்    
தார்மலி மார்பினன் ஓர்நுதல் விழியினன்
சீர்மலி சோதியன் தென்குடித் திட்டையை
சேர்பவர் தீவினை தீர்வது திண்ணமே....12