Thursday, June 27, 2013

திருநெடுங்களம்---2

இரவெனப் பகலெனப் பொழுதினைப் படைத்தே
...இன்னருள் புரிந்திடும் எருதமர் தலைவா
பரவையில் துரும்பென அலைந்துழல் உலகில்
...பவமதைக் கடந்திட உன்கழல் பிடித்தே
பரவிடும் அடியரைப் பரிவுடன் அணைக்கும்
...பரமனே செந்தமிழ்ப் பாடலை விரும்பும்
அரசனே அத்தனை நலமுற அருளாய்
...அருநட மாடிடும் நெடுங்களத் தரனே....3

சுமையென நோய்களும் தொடர்கிற மூப்பில்
...துணையுனைத் தேடினேன் துய்யனே ஈசா
எமையுன தலர்கழல் இணையடி நீழல்
...இடர்வினை தீர்த்துநல் இதமுறச் செய்வாய்
அமைதியும் தெளிவுறு ஞானமும் பெறவே
...அஞ்செழுத் தோதியுன் அருளினை கேட்பேன்
அமரனே அத்தனை நலமுற அருளாய்
...அருநட மாடிடும் நெடுங்களத் தரனே....4

Wednesday, June 26, 2013

திருநெடுங்களம்--1

எண்சீர் விருத்தம் - 'விளம் விளம் விளம் மா' அரையடி வாய்பாடு.
(
சம்பந்தர் தேவாரம் - இலம்பையங்கோட்டூர்ப் பதிகம் - 1.76.1 )

விடியலை வேண்டியே துயருறும் மாந்தர்
...மிடியிலா வாழ்வினைப் பெற்றிட வேண்டும்
கடியதாம் சுடுதணல் சொல்லதும் வீசும்
...காற்றதன் வருடலாய் மேவிட வேண்டும்
பொடியினை பூசியே அஞ்செழுத் தோதிப்
...பூவிலைத் தூவியே நினைந்திடும் அன்பால்
அடியனேன் வேண்டுவ தடைந்திட அருளாய்
...அருநட மாடிடும் நெடுங்களத் தரனே....1


அறையலை வானதி சிரமதில் ஏற்ற
...அண்ணலே உன்னருள் தன்னையே கேட்பேன்
குறைமலி வாழ்விதைப் பொருள்பெறு வாழ்வாய்க்
...கொண்டிடப் பிறர்நலம் பேணிடும் தன்மை
பொறைகுணம் இரங்கிடும் உணர்வுடன் அன்பைப்
...பொழிந்திடும் மழையெனும் பொன்னுளம் மேவ

அறவனே அத்தனை நலமுற அருளாய்
...அருநட மாடிடும் நெடுங்களத் தரனே....2

Tuesday, June 25, 2013

திருச்சிராப்பள்ளி-2

பூத்த நாண்மலர்ப் பொற்கொன் றையணிவான்
சீர்த்த நற்றாள் தெளிந்தடை நெஞ்சமே
ஆர்த்த லைத்திழி ஆற்றைச் சடைக்கொளும்
தீர்த்தன் மேவிய தென்சிராப் பள்ளியே....6

வல்வி .னைத்துயர் மாய்ந்திட வேண்டியே
நல்வி தம்தொழ நத்திடு நெஞ்சமே
அல்லி ருட்தழல் ஆடுவான் ஆலமர்
செல்வன் மேவிய தென்சிராப் பள்ளியே....7

இட்ட மாயமர்ந் தின் தமிழ் மாந்துவன்
நட்டம் செய்கழல் நத்திடு நெஞ்சமே
சுட்ட நீறணித் துய்யன் தண்ணருட்
சிட்டன் மேவிய தென்சிராப் பள்ளியே....8

பேய வள்பெரும் பேறுடை அன்பினள்
தாயென் றானைச் சரணடை நெஞ்சமே
தூயன் தாள்முடி தோன்றா(து) உயர்ந்திடும்
தீயன் மேவிய தென்சிராப் பள்ளியே....9

மெய்யில் பங்குடை மீன்விழி யாளுமை
ஐயன் பூந்தாள் அடையஎண் நெஞ்சமே
கையில் மான்மழு தீயுடன் காத்தருட்
செய்யன் மேவிய தென்சிராப் பள்ளியே....10

Friday, June 21, 2013

திருச்சிராப்பள்ளி--1

 (கலிவிருத்தம் - திருக்குறுந்தொகை அமைப்பில்)

பாவல் நாவலர் பாடிப் பரவிடும்
தேவ .னைத்தொழு தேயடை நெஞ்சமே
கோவில் நெஞ்சினில் கொண்ட அன்பரின்
சேவ மர்பதி தென்சிராப் பள்ளியே. ...1

 பாவென் றந்தமிழ்ப் பாடலைப் பாடியே
தாவென் றால்தரும் தாளடை நெஞ்சமே
நோவென் றேவரும் நொய்வினைத் தீர்க்கும்
தேவன் மேவிய தென்சிராப் பள்ளியே....2

கேட தைச்செய் கெடுவினை நீங்கிட
ஆட கத்தாள் அடையஎண் நெஞ்சமே
நாட கன் தருக் கீழ்மறை ஓதிய
சேடன் மேவிய தென்சிராப் பள்ளியே....3

குலையும் வண்ணம் கொடுந்துயர் செய்வினை
இலையென் றேகிட எண்ணிசெல் நெஞ்சமே
கலைமிகு மஞ்சார் கவினுறு வெண்பனிச்
சிலையன் மேவிய தென்சிராப் பள்ளியே....4

 கன்னல் வில்லினன் காமனைக் காய்ந்தவன்
பொன்ன லர்த்தாள் புகலடை நெஞ்சமே
என்ன துன்பிலும் இன்னருள் செய்பவன்
தென்னன் மேவிய தென்சிராப் பள்ளியே....5

Monday, June 17, 2013

திரு வலம்---3

தண்மதி அலைநதி சடையுடை சிவனவன்
வெண்பனி மலையரன் மென்மலர் பதம்தொழ
விண்ணையும் தருகிற விமலனின் உறைவிடம்
வண்புனல் மலரடி பணிதிரு வலமே....7


கலைமதி அணிபெறும் சடையினன் கழல்தொழ
உலைவுற இடர்செயும் வினையழி வகைசெயும்
நிலைபெறும் அருள்தரும் நிமலனின் உறைவிடம்
அலைநதி அடிதொழ அணைதிரு வலமே....8


பணியினை சிரமதில் அணிபவன் அடியரின்
பிணியினில் இதமுற அருள்கிற அவுடதம்
அணிமையில் துணையென வருபவன் உறைவிடம்
மணிநதி மலரடி பணிதிரு வலமே....9


பழிவிட அலைநதி சடைதனில் அடையுற
விழிநுதல் உடையவன் வெளிர்பொடி அணிபவன்
வழியெலாம் இசைபொழி துதியுடன் பரமனை
வழிபடும் அடியவர் மகிழ்திரு வலமே....10

Thursday, June 6, 2013

திரு வலம்--2

பிட்டதை செய்பவள் பணியினில் துணையவன்
மொட்டவிழ் மலரிடும் அடியவர் இடரதும்
பட்டிட அருள்செயும் பசுபதி உறைவிடம்
மட்டலர் மலிபொழில் அணிதிரு வலமே....3

விதியதன் விளைவினில்  வருமிடர் பொடிபட
நதியணி சடையினன் பதமலர் அருளுவன்
சதியுமை இடமதில் உடையவன் உறைவிடம்
மதியண விய மதில் அணிதிரு வலமே....4

வடிவுடை உமையவள் பதியவன் கடமதில்
துடியடி ஒலியினில் நடமிடும் தனியவன்
கடிகமழ் மலரணி அழகனின் உறைவிடம்
அடியவர் வினைகெட அடைதிரு வலமே....5





Wednesday, June 5, 2013

திருவல்லம் (இக்காலத்தில் "திருவலம்" )---1

(சந்தக் கலிவிருத்தம் - "தனதன தனதன தனதன தனதன".முதற்சீர் 'தானன' என்ற சந்தத்திலும் சில பாடல்களில் வரலாம்.பாடல்தோறும் ஈற்றுச்சீர் 'தனனா'. திருவிராகம் அமைப்பு. முடுகு ஓசை அமைந்த பாடல்கள்.)


குணமுளன் உருகிடும் அடியரின் துணையவன்
நிணமுறு கலமுடன் பலிபெற அலைபவன்
தணலெரி கடமுடை தனியனின்  உறைவிடம்
மணமலர் மலிபொழில் அணிதிரு வலமே....1
 
சதுரனாய் உலகுய முறைசெயும் கதியவன்
 பதுமையென் றசைவுறும் படிச்செயும் இறையவன்
 முதுமையில் பிணியினில் அருளரன் உறைவிடம்
  மதுமலர் மலிபொழில் அணிதிரு வலமே....2