Sunday, October 31, 2010

சிராப்பள்ளி சேர்!


( ஒரு விகற்ப இன்னிசை வெண்பா )

பற்றும் பழவினையால் பந்தப் படும்வேளை
சற்றும் சிவநாமம் சாற்றுவை நெஞ்சமே!
சுற்றும் கயலுயரத் துள்ளுமெழில் பொன்னியலை
தெற்றும் சிராப்பள்ளி சேர்....1

குருவாய் அமர்வோனின் கோலம் நினைந்தே
உருவாய் ஒளியாய் உணர்வாய் மனமே
தருவான் மலர்பதம் தாயாய் அருள்வான்
திருவார் சிராப்பள்ளி சேர்....2

தொல்வினை சூழ்ந்தே துயர்தரும் போதினில்
வெல்வழி யொன்றினை மேவிடு நெஞ்சமே
மெல்லிய லாளொடு வெள்ளை எருதமர்
செல்வன் சிராப்பள்ளி சேர்....3

அவமாய் அலைந்தே அலமரும் வாழ்வில்
நவமாம் வழியினை நாடிடில் நெஞ்சே
தவமே உருவெனச் சார்ந்தார்க்(கு) அருளும்
சிவனார் சிராப்பள்ளி சேர்....4

தாவல் தருவினையைத் தாண்டி உயர்வுறச்
சேவமர் செல்வனருள் தேடுமென் நெஞ்சமே
நா வல் அடியர் நயமுறப் போற்றிடும்
தேவன் சிராப்பள்ளி சேர்.....5

தாவல் = வருத்தம்
சே + அமர் = சேவமர் ( உடம்படு மெய் 'வ்' வந்து சேவமர் என்றாகியது )

Tuesday, October 26, 2010

ஆலவாய் மேவிய எம்பி ரானே ! - 5


(தானனா தானன..தந்த தான-- 5)

வாரிமீ தாடுது..ரும்ப தாக
...வாடுவோர் நாடிடும்..அஞ்சல் ஈவாய்
சாரியாய் ஊழ்துயர்.. தந்த போதுன்
...தாளதே நானுணர்.. சிந்தை யாவாய்
கோரியே மாதவள்.. வந்தி நாடும்
...கூலியா ளாகுவை..சுந்த ரேசா
ஆரியா ஆதர..வென்று மானாய்
...ஆலவாய் மேவிய.. எம்பி ரானே.

ஆரியன் - ஆசாரியன்; பெரியோன்.

Sunday, October 24, 2010

ஆலவாய் மேவிய எம்பி ரானே ! - 4

(தானனா தானன.. தந்த தான--4)

ஓடுமே தீவினை யஞ்சி யேதான்
...ஓதுமோர் ஆதியு .னன்ப தாலே
பாடுவோ ராயிர முன்ற னாமம்
...பாகுசேர் தேனத னின்ப மாமே
தோடுடை யாயுனை அன்று நாவால்
...சூடுபா மாலைசெய் விஞ்சை என்னே
ஆடுவாய் வானெழில் மிஞ்சு மாடல்
...ஆலவாய் மேவிய எம்பி ரானே.

Saturday, October 23, 2010

ஆலவாய் மேவிய எம்பி ரானே ! - 3

(தானனா தானன.. தந்த தான)

மாறலா தாடிடு .. மன்று ளானே
...மாசிலா மாமணி.. யென்று மானாய்க்
கூறதாய் மாதுமை..தங்கு மீசன்
...கோலமார் சோதியி.. .லின்பு சேரும்
பேறதாய் ஆகுமு.. .னன்பி .னாலே
...பீடதே யாகிடும்.. தஞ்ச மீவாய்
ஆறலை வேணிய.. சுந்த ரேசா
...ஆலவாய் மேவிய.. எம்பி ரானே.

மாறு=ஒப்புமை.

Thursday, October 21, 2010

ஆலவாய் மேவிய எம்பி ரானே ! - 2

(தானனா தானன .. தந்ததான--2)

மோனமாய் ஆலமர்.. கின்ற தேவே
...மோகமோ டாறையும்.. வென்றி டேனோ?
கூனலாய் வான்மதி.. கங்கை சூடும்
...கோதிலா வேணிய..னென்று வேத
கானமாய் ஓதிடும்.. அன்பர் நேசா
...காவலாய் ஆதர மென்று தாயும்
ஆனவா மாதுமை.. பங்க .னாகி
...ஆலவாய் மேவிய.. எம்பி ரானே.

ஆதரம்=அன்பு, உபசாரம்
மோகமோ டாறையும்= மோக, காம, லோப, குரோத, மத, மாச்சர்யம்.

Tuesday, October 19, 2010

ஆலவாய் மேவிய எம்பி ரானே !

(தானனா தானன .. தந்ததான)

பூரணா நீறணி..கின்ற ஈசா
...போதமே நானறி..கின்றிலேனே
பாரமார் ஊழ்தரு.. துன்பு மாயும்
..பாதமே நாடுயர்.. சிந்தை ஈவாய்
காரணா தீயெரி.. கின்ற ஈமம்
...காதலோ டாடிடு.. மன்ற மாகும்
ஆரமாய் மார்பிசை..கொன்றை யோடே
...ஆலவாய் மேவிய..எம்பி ரானே.

Saturday, October 9, 2010

காத்தருள் கச்சி ஏகம்பனே!--5


சுழலுறு வாழ்விதில் தொடர்கிற
நிழலென வினையதும் நேர்பட
உழலுதல் இன்றியென் றுய்வனோ?
கழலருள் கச்சியே கம்பனே....9.

தலமுளான் இளநிலா சடையினான்
குலைவிலா அன்பிலே கொலுவுளான்
வலமுளான் அருளினை வழங்குவான்
கலையினான் கச்சியே கம்பனே....10.

Thursday, October 7, 2010

காத்தருள் கச்சி ஏகம்பனே!--4

இமிழ்த்திடு கழல்களின் எழில்நடம்
தமிழ்த்திரு மறைகளும் சாற்றுமுன்
உமித்துணை நினைவிலேன்; உற்றவா
கமித்தருள் கச்சியே கம்பனே....7.

இமிழ்த்தல்=ஒலித்தல்.
உமி=நெல்லின் உமி(சிறிதளவு என்னும் பொருளில்)

சிரத்துடை பிறையனே!திரியுமுப்
புரத்தையும் எரிசெயும் புண்ணியா!
துரத்திடும் தொல்வினை தொலைத்தருள்
கரத்தினாய் கச்சியே கம்பனே!...8.

Tuesday, October 5, 2010

காத்தருள் கச்சி ஏகம்பனே!--3

நிதிதனை நினைந்துழல் நிலையினில்
அதிபதி உனதருள் அறிகிலேன்;
விதிதரும் விளைவினை வெல்கிற
கதியருள் கச்சியே கம்பனே....5.

வழித்துயர் மிகுந்தயிவ் வாழ்வினில்
விழித்துழல் வேனுனை வேண்டினேன்
பழித்திட வருகிறப் பாழ்வினை
கழித்தருள் கச்சியே கம்பனே....6.

Sunday, October 3, 2010

காத்தருள் கச்சி ஏகம்பனே!--2

மண்டிடும் வினைதனில் வாடியும்
கொண்டிடும் அன்பினில் கோரியே
தண்டமிழ்ப் பாமலர் சாற்றினேன்
கண்டருள் கச்சியே கம்பனே....3.

கோருதல்=வேண்டுதல்.

தண்ணுமை துடிதரும் தண்ணொலிப்
பண்ணுடன் ஆடிடும் பாதனே
பெண்ணுமை பதியருள் பேறளி
கண்ணுதல் கச்சியே கம்பனே....4.

தண்ணுமை=மத்தளம்.

Saturday, October 2, 2010

காத்தருள் கச்சி ஏகம்பனே!--1

வஞ்சி விருத்தம்.
-------------
'விளம் விளம் விளம்' என்ற வாய்பாடு.


நீர்த்திரை பனித்திட நெகிழ்வுடன்
நாத்தழும் பேறிட நானுனை
ஏத்திடு மாறறி யேனெனை
காத்தருள் கச்சியே கம்பனே....1.

நைவினை துயர்தரும் நாளுமே
எய்திடும் புகலினை எண்ணியே
துய்மலர் மாலைகள் சூட்டினேன்
கைகொடு கச்சியே கம்பனே.... 2