Tuesday, January 15, 2013

திருப்புன்கூர் --2


 கூவியரன் தாள்பற்றிக் குமுறுகிற பத்தனுக்காய்
தாவியெமன் தனைச்செற்ற தண்ணருளன் சேவினையே
ஏவியவன் நந்தனுக்கு இன்னருளில் விலகவைத்தான்
மேவியபுன் கூரடைய மேல்வினைகள் வீடுமன்றோ....7

நெஞ்சார நினைப்பவரின்  நேயனவன் கைலையினில்
விஞ்சைசேரும் ஆடலினை மேவியவன் நந்தனுக்கு
பஞ்சார்வெள் ளேற்றினையே பையநகர் என்றருள்வான்
மஞ்சாரும் பொழிற்புன்கூர் வணங்கவினை மாயுமன்றே....8

பஞ்சு=பஞ்சைப்போல் நிறத்திற்கு.


சோதித்தே அருள்வழங்கும் துங்கநதிச் சடையுடையான்
பாதித்தன் மெய்யினிலே பங்காக உமையுடையான்
ஆதித்தன் ஒளியாக ஆலின்கீழ் அமர்ந்தறங்கள்
போதிப்பான் புன்கூரைப் போற்ற வினை போகுமன்றே....9

 எல்லை யில்லாத இன்னருள் புரிபவனின்
வெல்ல ஒண்ணாத மெய்சிலிர்க்கும் பேருரைத்து
வில்வ யிலைதூவி வேண்டுவாரின் ஐயனவன்
செல்வன் திருப்புன்கூர் சேர வினைத் தீருமன்றே....10

வெல்ல ஒண்ணாத=ஒப்பில்லாத.

Friday, January 11, 2013

திருப்புன்கூர்-- 1

திருப்புன்கூர்
----------------------------------
(
நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா.மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையசையில் தொடங்கும்)

கலைவுறா பத்தியினில் கண்ணாரக் காணவேண்டித்
தலைவனை தில்லையினில் தரிசிக்கும் நந்தனுக்காய்
விலகுவாய் கொஞ்சமென்று விடைக்குரைத்த கைலாய
மலையினான் திருப்புன்கூர் வணங்கவினை மாயுமன்றே....1

திருநாளைப் போவார்தன் தீராத அன்புடனே
ஒருநாளே தரிசித்தால் உய்யும்நாள் எனவேண்டி
வருவாரை விடையேநீ மறைக்காமல் ஒதுங்கென்றான்
இருதாளை புன்கூரில் ஏத்தவினை மாயுமன்றே....2


நீரடையும் வேணியன்பேர்  நினைந்துருக வந்தருளும்
பூரணனைக் காணவரும் புனிதருக்காய் விடையொதுங்கும்
ஆரணிசேர் புன்கூரின் ஆடவல்லான் தாள்தொழவே
போரணியாய் வருவினையை புறங்காணல் எளிதாமே.3


தந்தையாய்த் தாங்குவான் தாள் தரிசித்தே உய்யவந்த
நந்தனார் வழிமறைக்கும் நந்திசற்று விலகவைத்த
அந்தமார் புன்கூரின் அங்கணனை தொழுவாரின்
சிந்தையார்  தீவினைகள் தீபுக்கப் பஞ்சாமே....4


சிரஞ்சேர்கை குவியநிதம் சிவனைநினை அடியாரின்
 உரஞ்சேர்மெய்த் தொண்டினுக்கே உவகையுடன் அருள்செய்யும்
 பரஞ்சோதி மேவுகின்ற பதிபுன்கூர் கண்டுதொழ
 வரஞ்சேரும் முன்செய்த வல்வினைகள் மாயுமன்றே....5






Wednesday, December 19, 2012

இலம்பையங்கோட்டூர் -- 2

பாடிடும் அன்பரின் பாவலங்கல்
சூடிடும் அருள்நிதி தோன்றுமிடம்
தேடிடும் பொழில்மலர்த் தேனளிகள்
கூடிடும் இலம்பையங் கோட்டூரே....6

நளிர்மதி சடையனை நாடிடுவோர்க்(கு)
ஒளிர்கழல் அருள்பவன் உறையுமிடம்
துளிர்விடு முகைமலர்ச் சுரும்பினமார்
குளிர்பொழில் இலம்பையங் கோட்டூரே....7

 நிசமவன் தீங்கினை நீக்கியன்பில்
வசமுற அருள்கிற வள்ளலிடம்
அசைவுறு வணம்குயில் ஆர்த்திடும்பண்
இசைமலி இலம்பையங் கோட்டூரே....8

பன்னகம் அணிபவன் பைந்தமிழில்
சொன்மலர் மாலைகள் சூடுமையன்
பொன்னவன் உறைவிடம் பூஞ்சுரும்பார்த்(து)
இன்புறும் இலம்பையங் கோட்டூரே....9

திசையறி கிலாவெளித் திரிகோள்கள்
விசையுறு கதிசெல விதித்தவன்நல்
இசையது வானவன் இருக்குமிடம்
இசையுடை இலம்பையங் கோட்டூரே....10








Saturday, December 15, 2012

இலம்பையங்கோட்டூர்-- 1

இலம்பையங்கோட்டூர்
-----------------------------
('
விளம் விளம் காய்' - என்ற அமைப்பு.சம்பந்தர் தேவாரம் - 1.114.1 - "குருந்தவன் குருகவன் கூர்மையவன்")

வார்சடை மீதொளிர் மதியுடையான்
சீர்மிகு பேர்தொழும் அன்பருளம்
சார்பவன் உறைவிடம் தண்பொழில்சூழ்
ஏர்மலி இலம்பையங் கோட்டூரே....1

விழிநுதல் உடையவன் வெவ்வினைசெய்
பழியினில் தொடரிடர்ப்  பார்த்தருளைப்
பொழிகுவன் உறைவிடம் பூஅளியார்
எழில்பொழில் இலம்பையங் கோட்டூரே....2

கரும்பினை கரம்கொளும் காமாட்சி
விரும்பிடும் ஈசனும் வேண்டுவதைத்
தரும்பதி உறைவிடம் தண்ணளியார்
இரும்பொழில் இலம்பையங் கோட்டூரே....3

ஊர்விடை அமர்பவன் உண்பலிதேர்
ஓர்முடைத் தலையெனும்  ஓடுடையான்
நீர்மடை எனவருள் நெஞ்சனிடம்
ஏருடை இலம்பையங் கோட்டூரே....4

தருஞ்சுக மவன்கழல் சாற்றுமன்பர்
பெருஞ்சுமை யெனும்வினை தீர்த்தருளும்
அருஞ்சுவைப் பேருடை ஐயனிடம்
இருஞ்சுனை இலம்பையங் கோட்டூரே....5





Thursday, December 6, 2012

திருக்கானூர் -- 5

 பொன்றும் காலம் வந்திடுமுன்
....புனிதன் தாளே கதியென்று
ஒன்றும் சித்தம் கொண்டன்பில்
....ஓதி உய்ய அடைநெஞ்சே
கன்றின் தாயாய்ப் பேணுபவன்
....கனிவாய் அருட்கண்  பார்த்திடுவான்
கொன்றை சூடி உறைகோவில்
....கொள்ளி டஞ்சூழ் கானூரே....9

ஆண வமெனும் மாசுதனை
....அகற்றி உய்வை அடைநெஞ்சே
வீண  டைவதோ இப்பிறவி
....விருதாய் மூப்பில் வருந்துவதென்
காணக் கண்செய் தவமாகக்
....கருணை தவழும் நுதல்விழியன்
கோணற் பிறையன் உறைகோவில்
....கொள்ளி டஞ்சூழ் கானூரே....10

Wednesday, December 5, 2012

திருக்கானூர் --4

காலக் கணக்குத் தவறாமல்
....காலன் வந்து நிற்குமுன்னே
மூலப் பொருளாம் முன்னவனின்
....முடி,தாள்  போற்றி அடைநெஞ்சே
சீலச் சுடராய்த் திகழ்கிறவன்
....தேடி அருளைத் தந்திடுவான்
கோலப் பிறையன் உறைகோவில்
....கொள்ளி  டஞ்சூழ் கானூரே....7

தொடுக்கும் போராய் பிணிவாட்டும்
....துன்பை எண்ணிக் கலங்காமல்
உடுக்கை ஒலியில் நடமாடும்
....ஒருவன் போற்றி அடைநெஞ்சே
எடுக்கும் பிறவிக் கடல்தாண்ட
....இணையில் அருளை வரமாகக்
கொடுக்கும் பெருமான் உறைகோவில்
....கொள்ளி டஞ்சூழ் கானூரே....8

Monday, December 3, 2012

திருக்கானூர் -- 3

சீரார் இளமை தேயபிணி
....தேடி வரவும்  இயமபடர்
ஓரா துயிரைக் கொள்ளுமுனம்
....உய்வை நாடி அடைநெஞ்சே!
காரார் கண்டன் கதியாகி
....கனிவோ டருளும் கழலனவன்
கூரார் மழுவன் உறைகோயில்
.. கொள்ளி டஞ்சூழ் கானூரே....5

தள்ளும் வயதில் தடுமாறித்
....தடிக்கை கொண்டு பிணிமூப்பில்
விள்ள முடியா வேதனையை
.... விட்டு விலக அடைநெஞ்சே
அள்ளும் மலரின் மணமாக
....அருளும் வள்ளல் ஒளிர்பிறையை
கொள்ளும் சடையன் உறைகோவில்
....கொள்ளி டஞ்சூழ் கானூரே....6

தள்ளும் வயது என்றால்,
நடக்க முயலும்போது சுதாரிக்க இயலாமல்
'தள்ளும்'வயதான முதுமையில் என்ற பொருளில்.

திருக்  கானூர்
 

Thursday, November 29, 2012

திருக்கானூர்-- 2

எஞ்சும் நாளில் முதுமையினில்
    ....இடர்கள் பலவும் பட்டுழல
    அஞ்சும் காலன் வருமுன்னே
    ....அரன்பேர் போற்றி அடைநெஞ்சே
   பிஞ்சு நிலவும் பேரலையாய்
    ....பெருகும் நதியும் கொன்றையுமே  
    குஞ்சி வைத்தான் உறைகோவில்
    ....கொள்ளி டஞ்சூழ் கானூரே....3

ஆறு தலதை விழைமூப்பில்
....அண்டும் துன்பம் எத்தனையோ
நீறு புனைந்து நெகிழ்ந்துருகி
....நேயன் போற்றி அடைநெஞ்சே
ஆறு சடையன் ஆலின்கீழ்
....அமரும் தவம்செய் போதமருள்
கூறும் ஒருவன் உறைகோவில்
....கொள்ளி டஞ்சூழ் கானூரே....4

Tuesday, November 27, 2012

திருக்கானூர்--- 1

திருக்கானூர்
----------------------------
(
அறுசீர் விருத்தம் - 'மா மா காய்' - அரையடி வாய்பாடு)
திருக்கானூர் - இத்தலம் மேலைத்திருக்காட்டுப்பள்ளியிலிருந்து சில கிலோமிட்டர் தொலைவில், கொள்ளிட நதிக்கரையில் அமைந்துள்ளது.

 தளைத்து வினைசெய் யிடர்தீர்க்கும்
...சடையன் செந்தாள் மலர்பற்றிக்
களத்தில் விடத்தைக் கொண்டருளும்
...கதியே எனநீ  அடைநெஞ்சே
தளத்தில் வெளியில் நடம்செய்யும்
...தனியன் புரத்தை நகையாலே
கொளுத்தும் ஈசன் உறைகோவில்
...கொள்ளி  டஞ்சூழ் கானூரே....1

தளம்=மேடை, வெளி=ஆகாசம்.
களம்=தொண்டை.
தனியன்=ஒப்பில்லாதவன்.

இறைவன் ஈசன் என்றுணர்ந்து
....ஏத்திப் பணியும் அன்பர்க்கு
நிறைவைத் தருமே நிமலன் தாள்
....நினைந்து அடைநீ மடநெஞ்சே
நறைசேர் மலரால்  நன்மாலை
....நயமாய்ச் சூடும் நம்பனவன்
குறைகள் தீர்ப்பான் உறைகோவில்
....கொள்ளி டஞ்சூழ் கானூரே....2

நறை=தேன்.

Sunday, November 18, 2012

மழபாடி வயிரத்தூண் --5

உயர்வென்றும் தாழ்வென்றும் உருளும் வாழ்வில்
...உத்தமன் தாள் தொழுபவர்க் குய்வைத் தந்தே
துயர்செய்யும் இருவினையைத் தொலைப்பான் தன்னைச்
...சோதிபொங்கும் அருணமலை சுடரா னானைச்
செயல்தன்னில் விளைவாகத் திகழ்வான் தன்னைச்
...சீராக  அண்டமெல்லாம் செலுத்து வானை
வயல்சூழும் மழபாடி வயிரத் தூணை
...வாயார வாழ்த்தவினை மாயும் தானே....9

தூமதிசேர் வார்சடையன்  துணைத்தாள் பற்றித்
...தொடுத்தமலர்க் கொன்றைத்தார் சூட்டிப் போற்றின்
தாமதியா  தருள்செய்துத் தாங்கு வானைத்
...தருநீழல் அமர்மோனத் தவசி தன்னைச்
சேமநிதி யாயிடரைத் தீர்க்கும் தேவைச்
...சேவூரும் பெம்மானை, சீலன் தன்னை
மாமதில்சூழ் மழபாடி வயிரத் தூணை
...வாயார வாழ்த்தவினை மாயும் தானே....10