Saturday, January 14, 2012

சிராப்பள்ளிச் சிவன்தன்னைச் சிந்தி (திருச்சிராப்பள்ளி)

(எண்சீர் விருத்தம் - 'காய் காய் மா தேமா' என்ற அரையடி வாய்பாடு)
----------------------------------------------------------------------
ஆராத பேரின்ப அருளா .னானை
...அயன்மாலும் தொழுதேத்தும் அழலா.னானை
சீராரும் பிறைமேவும் சென்னி யானை
...செந்துவர்வாய்க் குமிண்சிரிப்பில் திகழ்கின் றானை
வாராத செல்வமென வருகின் றானை
...வாழ்வாக நினைத்தன்பர் வழுத்தும் கோனை
தீராத வினைதீர்க்கும் தெய்வ மானச்
....சிராப்பள்ளிச் சிவன் தன்னைச் சிந்தி நெஞ்சே!....1

நேயவனை நின்மலனை நிதியா .னானை
...நினைவினிலே எப்பொழுதும் நிற்கின் றானை
மேயவனை அன்பருளம் வீற்றான் தன்னை
...வெண்ணீற்றன் குளிரிமய வெற்பின் கோனை
தீயவினை செய்நோயைத் தீர்க்கின் றானை
...தேன் தமிழில் தேவாரம் செவியேற் பானை
சேயவனைத் தந்தருளும் தாயும் ஆன
...சிராப்பள்ளிச் சிவன் தன்னைச் சிந்தி நெஞ்சே!....2

நேயவன்=மிக்க அன்புடையவன்.
மேயவன்=விரும்பியவன்.

Wednesday, January 4, 2012

திருமழபாடி!-- 4

நலமே விளைவாய் .. அடைநெஞ்சே
...நடுவாய் விதையாய் .. இறைநேசம்
நிலைபே றுடையான் ..நினைவாகின்
....நிறைவாய் இனிதாய் .. வருவானே
தலையோ டதிலே .. பலிதேர்வான்
....தழலாய் மலையாய் .. அருளீசன்
அலைகா விரிபாய் .. மழபாடி
....அகலா துறைமா .. மணிதானே....7

நறைசேர் மணமோ.. டலர்பூவை
...நவமாய் சரமாய் அணிவானே
கறைசேர் மிடறோன் .. பிறைசூடி
...கழலே சரணாய் .. அடைவாரின்
குறையே கிடவே .. வருமீசன்
...குணமா நிதியாம் .. குருநாதன்
அறைஆர் புனல்பாய்.. மழபாடி
...அகலா துறைமா .. மணிதானே....8

நறை=தேன் என்னும் பொருளில்.

Monday, January 2, 2012

திருக்காளத்தி!-- 5

வேத மெய்ப்பொருள் வேலன் ஓதிடும்
காதி னானுறை காளத்தி
ஆத ரம்பெறும் அன்பில் ஏத்திட
ஏத மென்பதும் இல்லையே....9

ஆடு வான்திரு ஆடல் தீயெரி
காடு ளானுறை காளத்தி
நாடி நற்றுணை நாளும் வேண்டிட
ஓடி வெவ்வினை ஓயுமே....10

Sunday, December 25, 2011

திருக்காளத்தி!--4

மங்கை யாளுமை மன்னன் செஞ்சடை
கங்கை யானுறை காளத்தி
இங்கி தம்பெற எண்ணி ஏத்திட
எங்கு மேநிறை இன்பமே....7

நைய வேபலி நாடும் கப்பரை
கையி .னானுறை காளத்தி
மெய்யில் நீறினை மேவி ஏத்திட
மையல் செய்வினை மாயுமே....8

Monday, December 19, 2011

திருக்காளத்தி!--3

ஐய னேயெனின் அஞ்சல் தந்திடும்
கையி னானுறை காளத்தி
பைய வேஇசை பாடிப் போற்றுதல்
செய்ய வல்வினை தீருமே....5

நாட்ட மோடருள் நல்கி உய்வழி
காட்டு வானுறை காளத்தி
வேட்டு மின்னிசை மேவ ஏத்திட
வாட்டு மூழ்வினை மாயுமே....6

Friday, December 9, 2011

திருக்காளத்தி!-- 2

விண்ணு லாவெயில் மூன்றும் தீப்படு
கண்ணி னானுறை காளத்தி
நண்ணி நற்றமிழ் நாளும் போற்றிடத்
திண்ண மாய்வினை தீருமே....3

விண்+உலாவு+எயில்=விண்ணுலாவெயில்

விண்ணி லாதிகழ் வேணி சேர்மலர்க்
கண்ணி யானுறை காளத்தி
அண்ணு வாருறு அன்பில் போற்றிட
மண்ணி னார்வினை மாயுமே....4

அண்ணுதல்= நெருங்குதல்.

Wednesday, December 7, 2011

திருக்காளத்தி-- 1

'தான தானன தான தானன
தான தானன தானன
தான தானன தான தானன
தான தானன தானன'
- என்ற சந்தம்.
ஈற்றுச் சீரைத் தவிர மற்ற சீர்கள் எல்லாம் குறிலில் முடியும்.

பிச்ச னேயெனும் அன்புக் காட்படும்
அச்சன் மேவிய காளத்தி
மெச்சி யோதிடும் அன்ப ருக்கவன்
வைச்ச மாநிதி ஆவனே....1

சுட்ட நீறணி சோமன் கீளுடைக்
கட்டு வானுறை காளத்தி
நிட்டை யாய்த்தொழும் நெஞ்சி னார்த்துயர்
விட்டு மேனிலை மேவுமே....2

Monday, December 5, 2011

திருமழபாடி!-- 3

வண்ணவிருத்தம்
-----------------
"தனனா தனனா .. தனதான"
"வரதா மணிநீ ...... யெனவோரில்" - திருப்புகழ் - பழநி.

தழையோ மலரோ .. அடிதூவின்
....சதமே அடைவா .. ரருளேதான்
பிழையே செயலா .. யலைவோரும்
....விடையோ .னினைவா .. லுயர்வாரே
விழைவா யரனார் .. புகழோதி
....மிகவே அடியார் .. தொழுமீசன்
அழகார் பொழில்சூழ் .. மழபாடி
....அகலா துறை மா மணிதானே....5

இதமா கிடுமே .. சிவநாமம்
....இணையே இலையே .. இனிதேதான்
முதலா .னவனாய் .. முடிவானான்
....முனமா லடிசேர்.. குருவானான்
சதமா யவனே .. கதியாகும்
....சரணா யடைவா .. ருளமேவும்
அதளா டையினான் .. மழபாடி
....அகலா துறைமா மணிதானே....6

Sunday, December 4, 2011

நஞ்சங்கூடு கண்டனே!-- 5

ஓடி செல்வம் சேர்த்திடும்
....உள்ளம் அமைதி கொள்ளுமோ?
வாடி நோகும் வாழ்வினில்
....வரமா யினிக்கும் பேரதே
கூடி இசைந்து பத்தியால்
....கூத்த! உன் தாள் சரணென
நாடி னாருக் கருள்செயும்
....நஞ்சங் கூடு கண்டனே....9

அவமே தருதீ வினையற
....அன்பர் நாடித் துதிசெய
தவமே உருவாய் அமர்ந்தவன்
....தயையாய் புகலை அளிப்பவன்
'புவனா தார நாதனே
....புனிதா பழமை யானவா
நவனே!' என்பார்க் கருள்செயும்
....நஞ்சங் கூடு கண்டனே....10

Thursday, December 1, 2011

நஞ்சங்கூடு கண்டனே!-- 4

உச்சி மீது வெண்பிறை
....உரகம் கங்கை ஏற்றவா
பச்சை யம்மை யோர்புறம்
....பாங்காய்க் கொண்டு நின்றவா
மெச்சி யோதும் பாடலை
....விரும்பும் உன்னைச் சரணென
நச்சி னாருக் கருள்செயும்
....நஞ்சங் கூடு கண்டனே....7

வியக்க வைக்கும் ஆடலில்
....விண்ணும் மண்ணும் இன்புறப்
பயக்கும் உன்றன் கருணையை
....பாடிப் பாடி அன்பொடு
தயக்கம் இன்றி உன்னடி
....சரணம் ஐயா என்றுமே
நயக்கும் அடியார்க் கருள்செயும்
....நஞ்சங் கூடு கண்டனே....8