ஓங்கு செந்தழல் உருவன் உயிர்களுக் குற்றவன் எம்மான்
தேங்கு மன்பினில் ஊழின் தீங்கினைத் தீர்த்தருள் செய்வன்
வீங்கு தென்றலாம் குளிர்தாள் வேண்டியே பாடிடும் அப்பர்
தாங்கும் கல்லுமொர் புணையாய்த் தந்தநம் தாயுமா னவனே....5
திருநாவுக்கரசரைக் கல்லோடு கட்டிச் சமணர்கள் கடலுள் ஆழ்த்தியபோது, சிவன்
அருளால் அக்கல்லே ஓர் தெப்பம் போல் மிதந்து அவர் கரைசேர்ந்ததைச் சுட்டியது.
கூடல் நன்னகர் ஆளும் குழகனின் விதவித மான
ஆடல் கண்டுளம் மகிழும் அன்பினள் அடிதொழ மாலை
போட முந்திட நெகிழும் புடைவையால் மனம்தடு மாறும்
தாட கைக்கெனச் சாய்ந்து தந்தநம் தாயுமா னவனே....6
திருப்பனந்தாளில் தாடகை என்ற பெண் பூசிக்கும்போது மாலை அணிவிக்கவரும்போது
அவள் ஆடையும் நெகிழ, அவள் முழங்கைகளால் ஆடையை அழுத்திப்பற்றிக்கொள்ள,
இலிங்கத்திருமேனியைச்
சாய்த்து இறைவன் அம்மாலையை ஏற்றுக்கொண்டான். இந்நிகழ்ச்சியைச் சுட்டியது.
புடைவையும் நெகிழ்வுற - அவள் மனம் நெகிழ்ந்தது மட்டுமன்றி அவள் அணிந்த ஆடையும்
நெகிழ்ந்தது என்பதைப் புலப்படுத்தும் பிரயோகம்;
நெகிழ்தல் - குழைதல்; இளகுதல்; நழுவுதல் (To slip off, as a garment);