Tuesday, August 18, 2009

பரமாஉனைத் துதித்தேன்!

வசுதேவரின் மகனாய்ச்சிறை மறைவாயவ தரித்தாய்!
சிசுபாலனை வதைசெய்திடத் திருமாலென உதித்தாய்!
நசைநீங்கிய நலம்தந்திடும் நவகீதையை அளித்தாய்!
பசுமாடுகள் தினம்காத்திடும் பரமாஉனைத் துதித்தேன்!

Saturday, August 8, 2009

அருள் வண்ணம் !

கறைவண்ணக் கண்டனவன் கழல்வண்ணம் எழில்வண்ணம்
பிறைவண்ணன் செஞ்சடையன் பெருமைசொலல் எவ்வண்ணம்?
மறைவண்ணம் ஒலிவண்ணம் வளரொளிர்தீ செவ்வண்ணம்!
இறைவன் தன் அருள்வண்ணம் இதம்தரும்நம் மனம்கொள்வம்.

Monday, July 27, 2009

வெண்காடடை மனமே!

பற்றும் இருவினையில் பங்கம் உறுவதுமேன்?
சற்றும் சிவநினைவில் தோய்தல் நலம்பயக்கும்
நெற்றி விழிஅழலன் நீல மணிமிடறன்
வெற்றி தரும் அரனின் வெண்கா டடைமனமே!

பாத மிடுநடனம் பார்க்கப் பரவசமாம்
சீத மிகுமிமய சீலன் அருள்விழைந்து
காத லுறுமனதில் காட்சி தருமிறையாம்
வேத முழுமுதல்வன் வெண்கா டடைமனமே!

பண்ணீ ரொருதவமும் பாவ வினையொழிமின்!
கண்ணீ ரதிலுணர்ந்து காணும் அருள்நிதியன்
தண்ணீ ரென உயிரைத் தாங்கும் இறைவனவன்
வெண்ணீ றணிஅரனின் வெண்கா டடைமனமே!

Sunday, July 19, 2009

சரணிணை அருளாய்!

செஞ்சடை யோனே! செங்கழல் பாதா!
...திருமுக ஒளியினில் நிறைமனம் பெறவை!
நஞ்சமு துண்டாய்! நம்பிடு வோர்க்கு
...நலமுறு கருணையை நயமுடன் புரிவாய்!
அஞ்சலி செய்தே அன்புடன் ஓர்ந்தால்
...அமுதினு மினிதெனும் அகமதில் வருவாய்!
சஞ்சல மில்லா சாந்தியை வேண்டின்
...சடுதியில் அடைகென சரணிணை அருளாய்!

Saturday, July 11, 2009

ஏழிசை அரசி!

நிலைமண்டில ஆசிரியப்பா.

நல்லிசை வாணி!நான்முகன் தேவி!
கல்வியும் நீயே!கலைகளின் ராணி!
யாழிசை ஒலிநீ!ஏழிசை அரசி!
தூயநின் பதமே தொழுதேன் தாயே!
சந்ததம் உனையே சரணெனக் கொண்டேன்!
உன்றனின் அருள்தான் உற்றிடு புகலாம்!
செந்தமிழ் பாக்கள் சிறப்புறப் புனைய
செம்பொருள் தேர்சொல் செல்வமாய் அருளே!

Wednesday, July 8, 2009

முருகா! வரம்தா!

நினதுரு வேதான் நினைவாய் உணர்வால் நெகிழ்ந்தேன்!
நினதிரு தாளே நிறைவாய் பொருளாய் நினைந்தேன்!
கனலுரு வானாய்! கனியே! முருகா! கரைந்தேன்!
மனதிரு ளூடே வருவினை நீங்கும் வரம்தா!

Tuesday, July 7, 2009

நடம்காணீர்!

பம்பைத் துடியொலியும் பாடலும் சங்கமிக்க
நம்பன் பயிலும் நடம்காணீர்!-- தும்பை
மருவுடன்நன் கொன்றை மலர்சூடும் கூத்தன்
அருளமுதப் பார்வை அழகு.

Saturday, June 27, 2009

அஞ்சல் அருளும் ஐயா போற்றி!

1.அங்கை அனலோய் அரனே போற்றி!
மங்கை இடமாய் வகுத்தாய் போற்றி!
கங்கைச் சடையோய் கழலே போற்றி!
சங்கை தீர்க்கும் சதுரா போற்றி!

2.மோன நிலையில் மொழிந்தாய் போற்றி!
ஞான ஒளியே நாதா போற்றி!
தீன தயாள சிவனே போற்றி!
கான நடத்தில் களிப்பாய் போற்றி!

3.நீறு புனைந்த நிமலா போற்றி!
கீறு பிறையோய் கீர்த்தி போற்றி!
ஏறுடையவா  ஏற்றம் போற்றி!
மாறு முலகின் மன்னே போற்றி!

4.பேயம் மையினோர் பிள்ளாய்! போற்றி!
வேயன் நதோளி மணாளா போற்றி!
தோயும் அன்பின் துணையே போற்றி!
தாயும் ஆகும் தலைவா போற்றி!

5.ஆரா அமுதே அரனே போற்றி!
பேரா யிரமும் பெற்றாய் போற்றி!
வாரா துவந்த மணியே போற்றி!
தீரா வினையைத் தீர்ப்பாய் போற்றி!

6.மன்றுள் ஆடும் மகேசா போற்றி!
கன்றின் ஆவாய் காப்பாய் போற்றி!
என்றும் இலங்கும் இன்னருள் போற்றி!
என்றன் தேவே இறையே போற்றி!

7.செஞ்சொல் பரவும் சிவமே போற்றி!
விஞ்சும் நடம்செய் வேதா போற்றி!
அஞ்சல் அருளும் ஐயா போற்றி!
நஞ்சம் உண்டோன் நற்றாள் போற்றி!

Monday, June 22, 2009

உனையே கும்பிடுவேன்!

தண்ணார் பொழிலே! தண்தடமே!
...தவமாய் அருளும் சிற்பரனே!
பண்ணார் இசையில் நெஞ்சினிக்கப்
...பரவும் அடியார் தம்மிறையே!
கண்ணே! மணியே! கண்நுதலே!
...கனியே! சுவையே! தெய்வதமே!
விண்ணோர் அமிழ்தே! கற்பகமே!
...விகிர்தா! உனையே கும்பிடுவேன்!

Thursday, June 18, 2009

கவிதை ஊறும்!

கோலமயில் நடமாடி அழகை வார்க்கும்!
...குமரனவன் வாகனமாய் மனதை ஈர்க்கும்!
ஓலமிடும் கடலாடும் அலையும் மோதும்!
...உவகையினில் வேலவனின் புகழை ஓதும்!
சீலமிகு அடியாரின் தெளிவில் தோணும்
...சிவகுருவின் பார்வையெனும் ஒளியில் காணும்!
மாலவனின் மருகோனை மறையும் கூறும்!
...மனமுருகும் பக்தியினில் கவிதை ஊறும்!