Sunday, April 20, 2014

என் பணி அரன் துதி!

 
என்றென்றும் அரன் பணியில் !



 

திருமதி  T.V.தங்கமணி 

 

தோற்றம்  : 05-10-1939        மறைவு  : 28-03-2014



------------------------------------------------------------------------------------------------------
காரைக்கா லம்மையெனக் கனிந்தபக்தை  இவர்போல
யாரைக்காண் போம்இனிநாம்? அனுதினமும் கண்ணுதலான்
சீரைத்தம் செய்யுள்வழி செப்பியவந்த அன்னையைத்தன்
ஊரைத்தான் காண்பிக்க உளம்கொண்டான் ஐயனுமே.

.. அனந்த் -   28-3-2014

------------------------------------------------------------------------------------------------------

எங்குமணி யாகவரா ஏறுமரன் கடல்நஞ்சம்
தங்குமணி கண்டத்தன் தண்மதியைத் தலைவைத்தான்
தங்கமணி என்றுசொல்லத் தக்கவர்செந் தமிழ்பாடு
தங்கமணி மாமியைத்தன் தாள்நிழலில் வைத்தானே.

... வி. சுப்பிரமணியன்  28-3-2014

--------------------------------------------------------------------------------------------------------
வயதினைக் கருதிடாமல்
வாலிபப் பருவத்தார்போல்
முயற்சியைப் பெற்றிருந்தார்
முனைப்புடன் யாப்பைக் கற்றே
அயர்ச்சியே இன்றி இங்கே
யாத்தனர் கவிதை, அன்னார்
இயக்கமோர் எடுத்துக் காட்டாய்
இளைஞர்கட்  கிருந்த துண்மை!

இலக்கி யத்தில் ஊறியதால்
இளமை பெற்ற தங்கமணி
கலங்க டிக்கும் நோய்களையும்
கலங்க டித்த பேராளார்
நிலைத்த  புகழைப் பெற்றுள்ளார்
நெஞ்சில் என்றும் பாசத்தை
இலக்காய்க் கொண்ட கவிஞருக்கு
எங்கள் இதய அஞ்சலிகள்.

... இலந்தை
--------------------------------------------------------------------------------------------------------


அம்மையார்  தங்கமணி  ஆண்டவன்  அருளால் அன்னான்
செம்மைசேர்  நாமம்பாடித்   திருவடி யடைந்தசேதி
எம்மையும்  அதிரச்செய்தே  ஏக்கத்தை  உருவாக்கிற்றே
இம்மையில்  தவத்தைச் செய்த  இனியநம் அம்மைக்கிங்கே ,
தம்மைநே ரில்லா அந்தத்  தலைவன்தண் னருளைப் பெய்தே
அம்மையில் அம்மைபாட அருகமர்ந்  திணித்து கேட்டே 
மும்மையும்  புகழில் ஏற்றி   முறையருள்  புரிக இன்றே!
நம்மைநாம் தேற்றிக் கொள்ளும் நன்மனம்  நல்கிநிற்க!
 
... புலவர் இராமமூர்த்தி
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

சிவ நினைவுடனேயே இருந்தவர்.

பிரதோஷ கால நேரத்திலேயே அவரைச் சிவன் தன்னடிக்கீழ் அமர்த்தியமையை என்னென்று சொல்லுவது! அவர் பக்தியை எப்படி மெச்சுவது?

அவருடைய உறுதியில் ஆயிரத்தில் ஒரு பங்கேனும் நமக்கு அருளும் படி அவரை வேண்டுகிறேன்.

என்றும் எமதுள்ளத்தில் இருந்து எம்மை வழி நடத்த வேண்டுகிறேன்.

 - sankara dass
--------------------------------------------------------------------------------------------------------------

blog related contact email id: akilacsr2715@gmail.com / ramasamis@yahoo.co.in

Wednesday, November 27, 2013

தேன்மலர் மாலைகள் தோளினில் சூடித் --திகழ்ந்திடும் அம்பல வாணன் பங்கில்
கூன்பிறை நெற்றியள் கொண்டான் --கும்பிடு வாருளம் நிற்பான்
தான் தனி யாய்சுடு கான் தனில் ஆடும்-- தாண்டவன் விண்ணதித் துங்க கங்கை
பான்மதி ஆர்சடை மீது -- பாம்பணி எம்பெரு மானே....7

ஆடி மகிழ்ந்திடும் தில்லையின் கோனை -- அண்டிய பேர்க்கிலை துன்பம் வாழ்வில்
நாடி நல்லருள் செய்வான் -- நம்பிடும் அன்பரின் நேயன்
சூடி டும்பிறை மிளிர்சடை கொண்ட -- துய்யபொற் பாதனின் ஊராம் வண்டு
பாடி  சோலை சூழும் -- பாம்பணி நன்னகர் தானே. ..8


அங்கையில் ஊனார் தலைக்கலன்  ஆக -- ஐயம் ஏற்றிடச் சென்று தேர்வான்
செங்கனல்  கானினில் ஆடும் -- சேவடிப் போற்றுவார்க் கன்பன்
அங்கணன் தாள்முடிக் கண்டிட ஒண்ணா(து) -- அன்றயன் மால்முனர் தீயாய் நின்றான்
பங்கொரு மாதமர் கின்ற -- பாம்பணி எம்பெரு மானே....9

காய்சின வேங்கையின் ஈருரி கொண்ட -- கண்ணுதல் வேளெரி செய்த ழித்தான்
தூய்மதி சூடிய தேசன் -- தொண்டர் மனத்துள் நிற்பான்
வாய்மொழி நான்மறை ஓதிடும் எம்மான் -- வார்சடை யான்பதி சேல் துள்ளிப்
பாய்புனல் சேர்வயல் சூழும் -- பாம்பணி நன்னகர் தானே....10
 

Saturday, October 26, 2013

பாம்பணி--திருப்பாதாளீச்சரம் ---பாமணி --3

அம்பல மாடும் குரைகழல் பாதன் -- அன்பரை ஆட்கொளும் மெய்யன் ஐயன்
வெம்புலி தோலுடை யாக-- விண்ணதி கொன்றையை சூடும்
சம்புவி .னஞ்சக் கரமுரைப் பாரைத்-- தாங்கிடு வான்பதி வண்டு மொய்க்கும்
பைம்பொழில் சூழ்ந்தழ காரும் .. பாம்பணி நன்னகர் தானே....4

உச்சியில் வெண்மதிக் கண்ணியைச் சூடும்-- ஒப்பிலி யானவன் செய்யன் ஐயன்
நச்சை அமுதாய் உண்ட-- நம்பன் அடியவர் அன்பன்
பச்சை நிறத்துமை யாளவள் காந்தன் --பற்றிடு வார்க்குறு தாள ளிக்கும்
பச்ச முடைப்பரன் எந்தை  -- பாம்பணி எம்பெரு மானே....5

வெயிலினில் வீசுமென் மாருதம் போல -- வெவ்வினைத் துன்பதை தீர்க்கும் அன்பில்
அயிலுடை சூலம் ஏந்தி--அன்பர்க் கருள்செயும் வள்ளல்
மயிலன சாயல் எழிலுமை பங்கன் -- மானுடை கையன் ஊர தென்பார்
பயிர்வளர் செய்புடை சூழும் -- பாம்பணி எம்பெரு மானே....6


Saturday, October 19, 2013

பாம்பணி - திருப்பாதாளீச்சரம்--பாமணி(இக்கால வழக்கில் )

தண்ணிறை வெண்பனி சூழ்மலை மன்னன் -- சஞ்சலம் தந்திடும் துன்ப றுக்கும்
பெண்ணுமை பங்கினன் வேளை-- தீயெரி யாகிடச் செற்றான்
பண்ணிய மோடிசை வாய்நடம் செய்யும்--பார்வதி நாயகன் தன்னூர் வண்டு
பண்ணிசை ஆர்பொழில் சூழும் -- பாம்பணி நன்னகர் தானே....2

ஆலமர் செல்வனை 'ஆ'வது முட்ட-- மெய்வடு கண்டதும் ஆட லன்றோ
ஆல மருந்திவிண் ணோரைக்  --காத்த கறைநிறை கண்டன்
கோல நிலவுடன் பாயலை கங்கை--கொன்றையும் பாங்குடன் உச்சி  சூடி
பாலன நீறுமெய் பூசும்-- பாம்பணி எம்பெரு மானே....3

 அடி 1-இல் - " 'ஆ'வது முட்ட-- மெய்வடு கண்டதும்..... "

( சுகலமுனிவர் வளர்த்த (காமதேனு) பசுவானது சிவலிங்கத்தின்மீது
அபிடேகமாகப்பாலைப்பொழிந்தது. முனிவர் தனக்குப் பால் குறைந்து விடுமே என்று
 பசுவைக் கோபித்து அடித்தார்.அந்தப் பசு வருந்தி,வழிபட்டதால்
 தனக்கு நேர்ந்த நிலையை உணர்த்துவது போல சிவலிங்கத்தை முட்டி ஓடி
 பசுபதி தீர்த்தத்தில் விழுந்து இறந்தது.இறைவன் காட்சிதந்து பசுவை உயிர்ப்பித்தார்.
பசு முட்டியதால் மூலத்திருமேனியில் மூன்று வடுக்களோடு காட்சிதருகிறார்.0

Thursday, October 17, 2013

பாம்பணி எம்பெருமான் (பாம்பணி - திருப்பாதாளீச்சரம்) (இக்கால வழக்கில் 'பாமணி'. இத்தலம் மன்னார்குடிக்கு அருகே உள்ளது)

பாம்பணி எம்பெருமான் (பாம்பணி - திருப்பாதாளீச்சரம்) (இக்கால வழக்கில் 'பாமணி'. இத்தலம் மன்னார்குடிக்கு அருகே உள்ளது)
=================================================
  (சம்பந்தர் தேவாரம் - 1.39.1 – திருவேட்களம்.
'அந்தமும் ஆதியும் ஆகிய அண்ணல் ஆரழல் அங்கை அமர்ந்தி லங்க'

குறிப்பு: பாம்பணி - பாம்பணி என்ற ஊர். (அவ்வூரில் உள்ள கோயிலின் பெயர் திருப்பாதாளீச்சரம்). 'பாம்பை அணியும்' என்றும் பொருள்கொள்ளலாம்.




தானன  தானன தானன  தான ... தானன  தானன  தான தான (1&3)

தானன தானன தான ... தானன தானன தான  (2&4)
அடி (1&3)--விளம் கூவிளம் கூவிளம் தேமா/ கூவிளம் கூவிளம் தேமா தேமா /

அரையடி -1எ /3எ :4சீர்கள்.---வெண்டளை விரவிவரும்.
அரையடி 1பி /3பி :4சீர்கள்.--அவற்றுள் முதல்மூன்று சீர்களிடை வெண்டளை விரவும்.
இவ்வரையடியில் 1பி &3பி யில் 3ஆம் சீர் குறிலில் முடியும்.
4ஆம் சீர் குறிலில் தொடங்கும்,3+4 சீர்கள் =  கூவிளங்காய் ஆகும்.
அடி 2&4 -- விளம் கூவிளம் தேமா/ விளம் கூவிளம் தேமா.
                    அரையடி 2எ/4எ :3சீர்கள் - வெண்டளை விரவும் 
                     அரையடி 2பி /4பி : 3சீர்கள் -- வெண்டளை விரவும்.
(அரையடிக்குள்  விளம் வரும் இடத்தில்  தேமா,புளிமா, கருவிளம் 
இவற்றுள் ஒன்றும் வரலாம். அப்படி வரின்  மற்ற சீர்களும் மாறி வெண்டளை பயிலும்.

 கோரிடு மன்பரின் துன்புகள் தீர்க்கும்-- குஞ்சர ஈருரி ஏற்ற மைந்தன்
காரொடு நேர்கறை கண்டன் -- கங்கையை சூடிய செம்மல்
சீரொடு நன்றையும் செய்திடும் சீலன் -- செங்கழ லானருள் தன்னை நண்ணி
பாரொடு  விண்பணிந் தேத்தும் --பாம்பணி எம்பெரு மாளே....1
 

Wednesday, September 4, 2013

திருக்கருகாவூர் - 1(2)

பிட்டு விற்கும் பெரியள் துணையானான்
சுட்ட நீற்றில் துலங்க அருள்செய்வான்
மொட்ட விழ்பூம் பொழில்சூழ் கருகாவூர்
சிட்டன் தாள்சேர் மனமே திருவாமே....6

பெரியள்=வயதில் பெரியவள்(வந்தி)

காட்டில் தீயில் கதித்தே நடம்செய்வான்
வாட்டும் துன்பில் வருவான் துணையாக
மாட்டின் மீதூர் மலையன் கருகாவூர்
நாட்ட மாகித் தொழுதால் நலமாமே....7

கோல கங்கை குளிர்வெண் மதிசூடி
பாலன் கொண்ட பசிக்காய் அமுதீந்த
நீல கண்டன் நிதியார் கருகாவூர்
சூலன் பாதம் தொழுவார் துயர்போமே....8

மானேய் கண்ணி மடவாள் உமைகேள்வன்
ஊனார் ஓடோ(டு) உணவுக் கலைவானின்
தேனார் பூங்கா திகழும் கருகாவூர்
போனாற் பொல்லா வினைகள் பொடியாமே....9

 பாய்தண் கங்கை படர்செஞ் சடையேற்றான்
தூய்நற் றாளைத் தொழுவார்க் கருள்செய்வான்
காய்நெல் காணும் வயல்சூழ் கருகாவூர்
போய்முன் வீழிற் பொல்லா வினைபோமே....10
தூய்=தூய.


 

Thursday, August 29, 2013

திருக்கருகாவூர் - 1

(கலிவிருத்தம் - 'தேமா தேமா புளிமா புளிமாங்காய்' - வாய்பாடு)(சம்பந்தர் தேவாரம் - 1.27.1 - "முந்தி நின்ற வினைக ளவைபோகச்")

மண்ணாய் விண்ணீர் வளிதீ எனவானான்
கண்ணால் அன்பைக் கனிவாய் அருளீசன்
தண்ணார் கங்கை சடையன் கருகாவூர்
எண்ணாய் நெஞ்சே இலையோர் இடர்தானே....1

தார்கொள் தோளில் தவழும் அரவேற்பான்
பேர்சொல் பத்தர் பிணிசெய் துயரோட்டும்
சீர்கொள் தாளன் திகழும் கருகாவூர்
சேர்க நெஞ்சமே சிதையும் வினைதானே....2

கோதே விஞ்சும் குணங்கொள் அடியேனுக்(கு)
ஆதா ரம்பூங் கழலே எனவேண்டி
மாதோர் பங்கன் வதியும் கருகாவூர்
நீ தீ தோட நினையாய் மடநெஞ்சே....3
கோது=குற்றம்.

நித்தன் ஆலின் நிழலில் அமர்போதன்
பத்தர் தம்மின் பரமன் கருகாவூர்
முத்தன் பூந்தாள் முடியில் தரிப்பார்க்கே
எய்த்தல் இல்லா இனிய நிலைதானே....4

அங்கம் நீற்றில் அழகாய்த் துதைந்தானின்
துங்க செந்தாள் தொழுவார்க் கருளீசன்
திங்கள்  சூடித் திகழும் கருகாவூர்
அங்கை கூப்பிப் பணிவார் அடியாரே....5


Sunday, August 18, 2013

திரு ஆவூர்ப் பசுபதீச்சரம்--5

துடியோ டொலிக்கும் பம்பையுடன்
...சுழன்றே ஆடும் நடம்கண்டு
பொடியார் மேனி புளகிக்க
...புடைசூழ் அடியார்க் கருளீசன்
கடிமா மதில்மூன் றெரிசெய்த
...கழலன் மேவி உறைகோவில்
அடியார் பலரும் வந்தேத்தும்
...ஆவூர்ப் பசுப தீச்சரமே....9

பிணியாய் வினைசெய் இடர்தீர்க்கும்
...பெம்மான் நின்ற ஊரர்தான்
பணிவாய் மனத்துள் அமைத்ததளி
...பரிவாய் அமர்ந்தே அருளியவன்
துணியாய்ப் பிறையை முடிகொண்டான்
...தொண்டர் துணைவன் உறைகோவில்
அணியார் சோலை புடைசூழும்
...ஆவூர்ப் பசுப தீச்சரமே....10

Thursday, August 15, 2013

திரு ஆவூர்ப் பசுபதீச்சரம்--4

எந்த துன்பம் வந்திடினும்
...எந்தை நாமம் சிந்திப்பார்
முந்து வினையும் நீங்கிடவே
...மூழ்கு சுழலாம் பவம்விடுப்பான்
சந்த இசைப்பாத் தமிழ்மாந்தும்
...தழலன் மேவி உறைகோவில்
அந்தண் சோலை புடைசூழும்
...ஆவூர்ப் பசுப தீச்சரமே....7

படையும்  அழலும் கரம்கொண்டான்
...பதமாய் ஆடல் புரிந்திடுவான்
விடையில் ஊர்ந்தே வந்திடுவான்
...விரும்பும் அடியார் துயர்தீர்ப்பான்
சடையன் மேவி அமர்கோவில்
...தவழும் காரார் மேகமெலாம்
அடையும் சோலை நிறைந்திருக்கும்
...ஆவூர்ப் பசுப தீச்சரமே....8

Monday, August 12, 2013

திரு ஆவூர்ப் பசுபதீச்சரம்--3

காடும் மலையும் வான்வெளியும்
...கழலன் ஆடும் களமாகும்
ஈடு வேறொன் றில்லாத
...இறைவன் அடியார் நீரிலிட்ட
ஏடும் எதிர்க்க அருள்வான்வீற்
...றிருக்கும் கோவில் தென்காற்றில்
ஆடும் பயிரார் வயல்சூழும்
...ஆவூர்ப் பசுப தீச்சரமே....5

 தசையைச் சுடுகான் தழலாடும்
...தனியன் மங்கை பங்குடையான்
விசமும் அமுதாய் விண்ணவர்க்காய்
...விரும்பி உண்ட ஈசனவன்
வசமும் ஆவான் அன்பினுக்கே
...மேவும் கோவில் வளிதவழ
அசையும் பயிரார் வயல்சூழும்
...ஆவூர்ப் பசுப தீச்சரமே....6

Saturday, August 10, 2013

திரு ஆவூர்ப் பசுபதீச்சரம்--2

ஈர்க்கும் தேசாய் ஒளிர்கின்ற
...எம்மான் மங்கை உமைபங்கன்
யார்க்கும் பரிவில் அருள்செய்வான்
...ஐயன் கழல்கள் பணிவாரின்
சீர்க்கும் பாடல் செவிமாந்தும்
...செய்யன் விழைவாய் அமர்கோவில்
ஆர்க்கும் பொன்னி அலைமோதும்
...ஆவூர்ப் பசுப தீச்சரமே....3

வெளியில் ஆடல் புரிகின்றான்
....விரிஞ்சன் மால்முன் அழலாகி
ஒளியில் சுடராய்த் திகழ்கின்ற
...உமையோர் பங்கன் புகழ்பாடத்
தெளியும் ஞானம் பெறவைக்கும்
 ...திங்கள் சூடி அமர்கோவில்   
 அளிகள் முரலும் பொழில்சூழும்
 ...ஆவூர்ப் பசுப தீச்சரமே....4

Wednesday, August 7, 2013

திரு ஆவூர்ப் பசுபதீச்சரம்--1

(அறுசீர் விருத்தம் - 'மா மா காய்' - அரையடி வாய்பாடு

பிஞ்சு மதியை அணிகின்ற
    ....பெண்ணோர் பங்கன் அடியார்கள்
தஞ்சம் என்றே கழல்பற்றின்
  ....தாங்கி அருளும் ஈசனவன்
நஞ்சை உண்ட கறைக்கண்டன்
  ....நாடி உறையும் திருக்கோவில்
அஞ்சொற் கிளிகள் நிறைசோலை
    ....ஆவூர்ப் பசுப தீச்சரமே....1

ஒளியில் சுடராய்த் திகழ்கின்ற
...உமையோர் பங்கன் புகழ்பாடித்
தெளியும் ஞானம் பெறவேண்டித்
...தேடும் அன்பர்க் கருள்செய்வான்
துளிவெண் பிறையை அணிகின்றத்
...துணைவன் மகிழ்ந்தே அமர்கோவில்
அளிகள் முரலும் பொழில்சூழும்
...ஆவூர்ப் பசுப தீச்சரமே. ..2

Saturday, August 3, 2013

தென்குடித்திட்டை ('திட்டை')---3

ஒருபது சிரம்தனை உடையவன் செருக்கழித்(து)
அருளினை அளித்தவன் அடியிணைப் போற்றியும்
திருமறை விழைபவன் தென்குடித் திட்டையை
மருவிடும் அடியவர் வல்வினை மாயுமே....8

 சூடிய மதிநதி துலங்கிடும் முடியுடன்
ஆடிய அடியையும் அயனரி காணவே
தேடிய சோதியன் தென்குடித் திட்டையை
நாடிய பத்தரை நல்லன நாடுமே....9

கரத்திலோர் மான்மறி கனல்மழு ஏந்திமுப்
புரத்தையே தீயெழப் பொடிசெயும் மன்னவன்
திரைத்தலை அரனுறை தென்குடித் திட்டையை
சிரத்தையாய்த் தொழுபவர் தீவினை சிதறுமே....10

அழுதவன் தாள்பணி அன்பரின் துணையவன்
எழுகதிர் ஒளியவன் இளமதி சடையனின்
செழுவயல் சூழ்தரு தென்குடித் திட்டையை
தொழுபவர் தொல்வினை தூசென விலகுமே....11

ஊர்விடை அமர்பவன்  வார்சடை மதியினன்    
தார்மலி மார்பினன் ஓர்நுதல் விழியினன்
சீர்மலி சோதியன் தென்குடித் திட்டையை
சேர்பவர் தீவினை தீர்வது திண்ணமே....12

Wednesday, July 31, 2013

தென்குடித்திட்டை ('திட்டை')--2

துஞ்சிட நமனையே நெஞ்சினில் உதைத்துடன்
கெஞ்சிய சிறுவனுக் கஞ்சலைத் தந்தவன்
செஞ்சடையானுறை தென்குடித் திட்டையை
தஞ்சமென் றடைபவர் சஞ்சலம் தீருமே....3

கன்னலின் வில்லினன் கனல்பட விழித்தவன்
இன்னலில் காத்திடும் முன்னவன் மதியணி
சென்னியன் மேவிடும் தென்குடித் திட்டையை
முன்னிடும் அடியவர் முன்வினை நீங்குமே....4

முன்னுதல்=கருதுதல்.

வரியதள் அணிபவன் மழவிடை ஊர்பவன்
விரிசடை சேர்பிறை மிளிர;புன் நகையினால்
திரிபுரம் எரித்தவன் தென்குடித் திட்டையை
பரிவொடு பணிபவர் பழவினை பாறுமே....5

 வெண்பனி மலையினன் விண்ணதிச் சடையினன்
பெண்ணுமை பங்கினன் பிஞ்ஞகன் மருமலி
செண்பக மாலையன் தென்குடித் திட்டையை
கண்பனித் தேத்துவார் கடுவினை கழலுமே....6

வேயினில் கீதமாய் வெளிதவழ் காற்றவன்
நோயினில் மருந்தவன் நோற்றிடு நாமமே
தீயினில் ஆடுவான் தென்குடித் திட்டையை
வாயினால் வாழ்த்துவார் வல்வினை மாயுமே....7







Tuesday, July 30, 2013

தென்குடித்திட்டை ('திட்டை')--1

கலிவிருத்தம். 'விளம் விளம் விளம் விளம்என்ற வாய்பாடு.
இதில் பன்னிரண்டு பாடல்கள்.
(
சம்பந்தர் தேவாரம் - 3.35.1 - முன்னைநான் மறையவை ..... தென்குடித் திட்டையே.)

துய்யவெண் பொடிதனில் துலங்கிடும் தூயவன்
ஐயமுண் கலனுடன் அலைந்துமே ஏற்பவன்
செய்யவன் மேவுமூர் தென்குடித் திட்டையை
மெய்யுறப் பணிபவர் வினையெலாம் தொலையுமே....1


ஓர்விழி நுதலினில் உடையசெஞ் சடையவன்
சீர்பெறு திருமுறை செவியுறக் கேட்பவன்
தேர்செலும் விழவுடைத் தென்குடித் திட்டையைச்
சார்கிற அடியவர் தம்வினை சாயுமே....2







Friday, July 26, 2013

திருவாஞ்சியம்--2

மன்னிய மாமணியாய் மறை ஓதிடும் தெய்வமவன்
கன்னலின் வில்லுடையான் தனை தீயெழச் செற்றவனை
உன்னிட அன்பூறும் உயர் பேருடை வித்தகனூர்
தென்னைகள் ஆர்பொழில்சூழ் திரு வாஞ்சிய நன்னகரே....6

 ஓங்கழ லாயுயர்ந்தே  ஒளிர் மாமலை ஆனவனின்
பூங்கழல்  நாடியவன் புகழ் பாடிடு வார்க்கருள்வான்
தேங்கிடு மன்பினிலே திகழ் முக்கணன் மேவிடுமூர்
தீங்கனி ஆர்பொழில்சூழ்  திரு வாஞ்சிய நன்னகரே....7

என்றுனை கண்டிடுவேன் எனும் நந்தனின் ஏக்கமற
அன்றருள் செய்தபரன் அடி போற்றிடும் அன்பரையே
நன்றுசெய் தாட்கொளும்பாய் நதி சூடிய ஈசனினூர்
தென்றிசைக் கோன்பணியும் திரு வாஞ்சிய நன்னகரே....8

கூன்பிறை சூடியவன் குழை ஆடிட ஆடிடுவான்
தான் தனி  யானவனாம் தவ மேசெயும்  செஞ்சடையன்
மான்கர மேந்தியவன் மறை ஓதிடும் சங்கரனூர்
தேன்மலர் ஆர்பொழில்சூழ் திரு வாஞ்சிய நன்னகரே....9


ஒவ்வுதல் தானிலையென் றுயர் சோதியாய் நின்றவனை
பவ்விய மாயடியார் பர விப்பணி பூரணணாம்
நவ்விகை ஏந்துவானூர் நறை மாமலர்ச் சோலைகளில்
செவ்வழி தேன்முரலும் திரு வாஞ்சிய நன்னகரே....10
ஓவ்வுதல்=ஒப்புதல்
நறை=நறுமணம்.

Wednesday, July 17, 2013

திருவாஞ்சியம்--- 1

 திருவாஞ்சியம் 
 --------------------
(
தானன தானதனா தன தானன தானதனா)

ஆலமர் செல்வனவன் அரு மாமறை ஓதியவன்
காலனைக் காய்ந்துதைத்த கழ லன்மத யானையதன்
தோலுடைப் போர்த்தியவன் அருள் செய்பதி ஆவதுதான்
சேலுகள் வாவிகள்சூழ் திரு வாஞ்சிய நன்னகரே....1

தாணுவென் றேதிகழ்வான் தழ லாடிடும் ஈசனவன்
காணுதற் கேயரிதாம் கழல் நாடிடு வோர்த்துணைவன்
பூணுவன் பாம்பணியாய் புரி வார்சடை யோனுறையூர்
சேணுயர் சோலைகள்சூழ் திரு வாஞ்சிய நன்னகரே....2

 திங்களை ஏந்துசடை திகழ் செம்மையி லேஒளிர்வான்
சங்கடம் தீர்த்திடுவான் சகம் காத்திடும் உமைபங்கன்
அங்கணன் நீலகண்டன் அடி யாருளம் மேயவனூர்
செங்கயல் பாய்புனல்சூழ் திரு வாஞ்சிய நன்னகரே....3

ஆரணி செஞ்சடையான் அடல் ஏற்றினில் ஊர்ந்திடுவான்
வாரணி நன்மலர்சேர் வழி பாட்டினி லேமகிழ்வான்
பூரணி பங்குடையான் பொடி பூசிய மெய்யனினூர்
சீரடி யார்திரளும் திரு வாஞ்சிய நன்னகரே....4

ஐய னருள்விரும்பும் அடி யார்மனக் கோவிலுளான்
நைய வரும்வினையை நலிந் தோடிடச் செய்திடுவான்
வைய மெலாம்புரக்கும் மதி சூடிடு வானிடமாம்
செய்யில் கொக்கிரைதேர் திரு வாஞ்சிய நன்னகரே....5

Sunday, July 14, 2013

திருவீழிமிழலை---2

6)
கூன்பிறை பாம்பொடு குதியலை சூடியே
தேன்பொழில் மிழலையு ளீரே
தேன்பொழில் மிழலையு ளீரும கழல்தொழ
ஊன்பிறப் பிலாநிலை உறுமே.
7)
ஊர்விடை அமர்ந்தவ உமையோர் பங்க,வான்
ஆர்பொழில் மிழலையு ளீரே
ஆர்பொழில் மிழலையுளீ ரும கழல்தொழ
தீர்வுறும் வினையிடர் திடமே.
8)
சாம்பலை மேனியில் தரித்தருள் தந்திடும்
தீம்பொழில் மிழலையு ளீரே
தீம்பொழில் மிழலையு ளீருமை தொழஎமை
நோம்படி செய்யிடர் நோமே.
9)
போதமும் மோனமாய் புரிந்தருள் தருகிற
கோதறு மிழலையு ளீரே
கோதறு மிழலையு ளீரும தடிதொழ
தீதறும் வளமுறும் திடனே.
10)
அக்கர மைந்தினை அடியவர் ஓதவும்
திக்கருள் மிழலையு ளீரே
திக்கரு மிழலையு ளீருமை நினைபவர்
தக்கநல் வாழ்வுறல் சதமே.

திக்கு=ஆதரவு.


Thursday, July 11, 2013

திருவீழிமிழலை---1

(திருமுக்கால் அமைப்பில். 1, 3-ஆம் அடிகள் அளவடி. 2, 4-ஆம் அடிகள் சிந்தடி. இடைமடக்கு அமைந்து வரும்.
4
விளம்
2
விளம் + மா
4
விளம்
2
விளம் + மா)

1)
விரிமரை கொடுஅரி தாள்தொழ அடைபதி
திரிமுகில் மிழலையு ளீரே
திரிமுகில் மிழலையு ளீருமை விழைபவர்
புரிவினை தீருமப் போதே.
2)
நரைவிடை யீருமை  அரிதொழ அடைபதி
திரைநதி மிழலையு ளீரே
திரைநதி மிழலையு ளீருமை மேவுவார்
புரைவினை விலகுமப் போதே.

புரைவினை=பாவவினை.
3)
தெறிவிழி மலர்கொடு தொழவரி அடைபதி
வெறிகமழ் மிழலையு ளீரே
வெறிகமழ் மிழலையு ளீருமை நினைபவர்
செறிவினை விலகியே செலுமே.
4)
எண்ணிட நிறைமலர் விழிகொடு அடைபதி
தண்ணெழில் மிழலையு  ளீரே
தண்ணெழில் மிழலையு ளீருமை நினைந்திட
நண்ணிய இடரிலை நலமே.
5)
படியினை அடியவர் பசியற அருளிய
படிபுகழ் மிழலையு ளீரே
படிபுகழ் மிழலையு ளீருமை எண்ணிடில்
பொடிபட இடர்வினை போமே.

Friday, July 5, 2013

திருநெடுங்களம்---5

வரியதள் உடுத்துவெண் மதிநதி யோடு
...மணமலர்க் கொன்றையைச் சூடிய முடியும்
எரியழல் கானதில் இணையிலா ஆடல்
...ஈர்ப்புடன் ஆடிடும் இன்னருட் தாளும்
அரியயன் அலைந்துமே அடைந்திடா வண்ணம்
...அழலென உயர்ந்தயெம் அதிசய மான
அரியனே அத்தனை நலமுற அருளாய்
...அருநட மாடிடும் நெடுங்களத் தரனே....9

 கீற்றென வெண்பிறை சூடிடும் சிவனே
...கெடுவினை தருதுயர் தீர்த்திடு முன்னைச்
சாற்றியே 'அருள்கஎம் சங்கரா' என்று
...தாளினைப் பிடித்தழும் பத்தனைக் காக்கச்
சீற்றமோ டெமனைசெங் கழலினால் உதைத்தச்
...செய்யனே சடைதனில் திகழ்தரும் கங்கை
ஆற்றனே அத்தனை நலமுற அருளாய்
...அருநட மாடிடும் நெடுங்களத் தரனே.