Monday, June 21, 2010

கடவூர் அடைநெஞ்சே!--5


புரியா மயலாம் மயக்கங்கள்
இரியக் கருதில் அடைநெஞ்சே!
கரிகா டுடையான் அடிதேடும்
கரியாற் கரியான் கடவூரே....9

கரிகாடு =சுடுகாடு

கவலை மிகுஇப் புவிவாழ்வில்
அவமாய் அலையா(து) அடைநெஞ்சே!
அவசம் தருமின் அருள்தங்கும்
கவசத் தலமாம் கடவூரே!....10

அவசம்=வசமின்மை, பரவசம்

Saturday, June 19, 2010

கடவூர் அடை நெஞ்சே!--4



புணையாய் வருமே புகல்நெஞ்சே!
துணையா ருமிலா தவந்திக்குப்
பிணையா ளெனவே அருள்செய்யக்
கணைதொட் டவனூர் கடவூரே....7

கணை=மண்வெட்டி.


நிரலாய் வினைசெய் துயர்சொல்லத்
தரமன் றெனநீ அடைநெஞ்சே!
அரனார் அவுணன் விறல்தீர்த்து
கரவாள் தருவார் கடவூரே....8

Thursday, June 17, 2010

கடவூர் அடைநெஞ்சே!--3


புவிவாழ் வெனுமோர் பவமூழ்கித்
தவியா வழியாம் அடைநெஞ்சே!
சவிசேர் நவியன் சிவனாரின்
கவினார் பொழில்சூழ் கடவூரே....5

சவி=ஒளி,அழகு.
நவியம்=புதுமை,புதியது.


நிலையா உடலென் றறிவோடு
நலமே கொளநீ நவில்நெஞ்சே
அலைசேர் நதியன் அரவேதான்
கலமா உடையான் கடவூரே....6

கலம்=ஆபரணம்,அணிகலம்

Tuesday, June 15, 2010

கடவூர் அடைநெஞ்சே!-- 2


கருவா யுருவாய்ப் பிறந்தென்றும்
மருளா யுலையா(து) அடைநெஞ்சே!
திருவோ டுமறைத் (து) அருள்செய்த
கருமா உரியான் கடவூரே.... 3

உலை=அலைதல்.

தலமாய்த் திகழும் அமுதீசர்
அலமே தருதீ வினைதீர்ப்பார்
கலையா மனமாய் மணதூபக்
கலயர் பணிசெய் கடவூரே....4

அலம்=துன்பம்

Sunday, June 13, 2010

கடவூர் அடை நெஞ்சே!---1


(வஞ்சி விருத்தம் - "புளிமா புளிமா புளிமாங்காய்" என்ற வாய்பாடு)

குறைசேர் மனதுள் குமையாமல்
நிறைவே அடைய நினைநெஞ்சே!
பிறையேர் சடையன் பெருநிதியன்
கறைசேர் மிடறன் கடவூரே.....1

குமைதல்=வருந்துதல்
ஏர்=மிக்க அழகு.


இருளா குவினை யதுதீர
வெருளா தவழி அடைநெஞ்சே!
மருமா மலர்சூழ் பொழில்மேவும்
கருமா மிடறன் கடவூரே.....2

Tuesday, June 8, 2010

தாள் தொழாய் நெஞ்சமே! --10


வீசுமோர் தென்றலாய் வெம்மையில் தோன்றுவார்
பூசுவார் நீற்றினைப் பூணுவார் நாகமே
தேசுசேர் மேனியார் சீர்கழல் தாளிணைப்
பேசுவார் இன்பமே பெற்றிருப் பார்களே.

Sunday, June 6, 2010

தாள் தொழாய் நெஞ்சமே! --9

அங்கயற் கண்ணியின் ஆருயிர் பங்கனே!
பொங்கழல் வண்ணனுன் பொற்கழல் போற்றினேன்
சங்கடந் தந்திடும் தாகமா சாகரத்
திங்கழுந் தாதவா றின்னருள் செய்விரே.


தாக மா சாகரம் - ஆசைப் பெருங்கடல்.

Saturday, June 5, 2010

தாள் தொழாய் நெஞ்சமே! - -௮.

தேகமே ஆலயம் தெய்வமும் நெஞ்சினுள்
ஏகனாய் மூலனாய் ஈசனாய்க் காப்பவர்
பாகமாய்த் தேவியைப் பட்சமாய் வைத்தவர்
நாகமார் கச்சினர் நம்மிடர் தீர்ப்பரே.

பட்சம்=அன்பு

Friday, June 4, 2010

தாள்தொழாய் நெஞ்சமே! -- 7

வேசமோ டாடலை மேவிடும் நாயகா!
பூசலார் உள்ளமே பொற்புறும் கோவிலாய்ப்
பூசனை நேமமாய்ப் பூண்டவுன் செய்யதாள்
நேசனாய்ச் செய்கவே நீலமார் கண்டனே.

Thursday, June 3, 2010

தாள்தொழாய் நெஞ்சமே! -- 6

காண்டுடன் வீசிடும் காலனின் பாசமும்
மூண்டெழும் பக்தியின் முன்னரென் செய்திடும்?
தூண்டிலின் மீனெனத் துன்புறா தின்புறத்
தாண்டவன் சங்கரன் தாள்தொழாய் நெஞ்சமே.

காண்டு=கோபம்.
பாசம்= கயிறு வடிவான ஆயுத வகை.

Wednesday, June 2, 2010

தாள் தொழாய் நெஞ்சமே!--- 5

தொல்லையைக் கூட்டிடும் சோதனை யாவுமே
இல்லையென் றோட்டுமே எம்பிரான் தண்ணருள்
தில்லையின் கூத்தனார் செம்மலர் தாள்தொழ
எல்லையில் வல்வினைக் கட்டொழிந் தின்பமே.

Tuesday, June 1, 2010

தாள் தொழாய் நெஞ்சமே -- 4

புன்புலால் யாக்கையைப் போற்றியேக் கொண்டதென்?
துன்பமே;நெஞ்சமே!"சோதியே!சங்கரா!
என்பதே மாலையாய் ஏற்றவா!நின்மலா!
என்பொனே!" என்றுநீ ஏத்தினால் இன்பமே.