Friday, December 18, 2009

கையில் விழுந்தகனி!

ஏழைப்பெண் அன்றளித்த எளியநெல்லிக் கனிமுனியால்
மாழைப்பொன் கனியான மகிமைபெறும் அறக்கனியாம்!
அரசனுக்கு அவ்வைதந்த அரியநெல்லிக் கனியன்பின்
வரமாக மக்களுயர் வாழ்வுக்கே உகந்தகனி!
புனிதவதி மனங்குளிரப் புண்ணியர்க்கு அளித்தகனி
வனிதையவள் பக்திக்கே வழங்குமுயர் மாங்கனியாம்!
நாவலென்னும் பழமரத்தில் நாடகமாய்ச் சுட்டகனி
ஆவலுடன் ஊதுகையில் அறிவுசொல்லும் அளிந்தகணி!
அன்னைதந்தை உலகெனவே ஆனைமுகன் பெற்றகனி
என்னதவம் செய்தடைந்தோம் எழில்பழனி அருள்கனியை!

2 comments:

Geetha Sambasivam said...

மாழைப்பொன் //

அர்த்தம் புரியலை. :(

Thangamani said...

மாழைப்பொன் //
அர்த்தம் புரியலை. :(

அன்புள்ள கீதா!

மாழை=பொன்,உலோகக்கட்டி.

என் விளக்கம்:
'கட்டிப் பொன்னால் ஆகிய நெல்லிக்கனி
ஆதிசங்கரர் அருளினால் கிடைத்தது!
செயற்கையாய் செய்யப் பட்டது அன்று!(மாழை என்பதற்கு
நான் கொண்ட பொருள்!)

அன்புடன்,
தங்கமணி.